மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வரும் 7ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி சுப்மன் கில் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.
கில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மூன்று சதங்களை விளாசி ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் சச்சின் பெரிய வீரரா கோலி பெரிய வீரரா என்று கேள்வி எழுந்த நிலையில் தற்போது கில் பெரிய வீரரா? கோலி பெரிய வீரரா என்ற விவாதமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இதற்கு பளிச்சென்று பதில் அளித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் ஆக இருந்தார். சச்சினையும் விராட் கோலியையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் கோலிக்கு சில குறைகள் பேட்டிங்கில் இருந்தது. 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆண்டர்சனை எதிர்கொள்ள விராட் கோலி கடுமையாக திணறினார்.
ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்ள விராட் கோலியிடம் பதில் இல்லை. விராட் கோலிக்கு அந்த தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது. ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரையில் அவருடைய பேட்டிங் நுட்பம் டெண்டுல்கர் போல் இருக்கிறது. சுப்மன் கில்லை ஆட்டமிழக்க வைப்பது என்பது மிகவும் கடுமையான விஷயமாக தற்போது தெரிகிறது. சுப்மன் கில்லிடம் எந்த குறையும் இருப்பது போல் தெரியவில்லை.
விராட் கோலியும், சச்சினும் கிரிக்கெட் ஜாம்பவான்கள். நான் இரு வீரர்களுடனும் விளையாடிருக்கிறேன். ஆனால் கோலிக்கு சில குறைகள் இருக்கிறது. நீங்கள் சுப்மன் கில்லை எடுத்துக் கொண்டால் அவர் சச்சினைப் போல் மிகப்பெரிய ஜாம்பவானாக உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு கிரிக்கெட் யுக்தியும் மன பலமும் இருக்கிறது என்று முகமது கைஃப் பாராட்டி உள்ளார். முஹம்மது கைஃப்பின் இந்த பதில் விராட் கோலி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.