மொஹாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரில் யார் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. மொஹாலியில் தொடங்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெறுவதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

இவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அஸ்வினை தவிர்த்து மற்ற மூவருமே ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான அணியில் இருக்கிறார்கள். அதில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தொடக்க வீரர் சுப்மன் கில் இருப்பதால், அவருக்கு உறுதுணையாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இஷான் கிஷன் மாற்று தொடக்க வீரராக இருக்கிறார்.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட் - இஷான் கிஷன் இருவரில் யார் நாளைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆசியக் கோப்பை தொடரில் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல் ரோகித் சர்மா இல்லாத சூழல்களில் இஷான் கிஷனே மாற்று தொடக்க வீரராகவும் களமிறங்கி அசத்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஆசியப் கோப்பை தொடரில் அதிக வாய்ப்புகளை பெற்றிடாத சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு நாளை போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கேஎல் ராகுல் உடன் இவர்கள் இருவரும் இணையும் பட்சத்தில், இஷான் கிஷன் தொடக்க நிலையில் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கவே வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.