முக்கிய அணி சிஎஸ்கே
ஐபிஎல்லின் முக்கிய அணிகளுள் ஒன்றாக சிஎஸ்கே காணப்படுகிறது. இதுவரை 3 ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையிலான சிஎஸ்கே வெற்றி கொண்டுள்ளது. கடந்த தொடர் தவிர்த்து தான் போட்டியிட்ட அனைத்து தொடர்களிலும் ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது.
மும்பையில் பயிற்சி
இந்நிலையில் கடந்த தொடரில் ப்ளே-ஆப்பிற்கு முன்னேறாமல் வெளியேறியதை இந்த தொடரில் பிடிக்கும் முடிவுடன் சிஎஸ்கே களத்தில் இறங்கியுள்ளது. தொடர் குறித்த அறிவிப்பிற்கு முன்னதாகவே சென்னையில் பயிற்சி போட்டிகளை அறிவித்து அதை செயல்படுத்திய சிஎஸ்கே, தொடர்ந்து மும்பையிலும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
விலகிய ஹாசல்வுட்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அணியின் முக்கிய பௌலராக பார்க்கப்படும் ஜோஷ் ஹாசல்வுட் அணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தார். இதையடுத்து அவருக்கு மாற்று வீரர் குறித்த அறிவிப்பை சிஎஸ்கே வெளியிடும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அறிவிக்காத சிஎஸ்கே
இதேபோல அணியின் துணை கேப்டன் குறித்த அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த இரண்டு விஷயங்கள் குறித்து அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் மௌனம் கலைத்துள்ளார். ஹாசல்வுட்டிற்கு பதிலாக மாற்று வீரருக்கு அவசியம் இல்லை என்றும் அணியின் பௌலிங் ஆர்டர் சிறப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணியில் இணைய மறுத்த வீரர்கள்
ஹாசல்வுட்டிற்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியாவின் பில்லி ஸ்டான்லேக் ம்ற்றும் இங்கிலாந்தின் ரீஸ் டாப்ளே ஆகியோரை சிஎஸ்கே அணுகியதாகவும் ஆனால் மும்பையில் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் அணியில் இணைய மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவசரம் இல்லை
இதேபோல துணை கேப்டன் குறித்த அறிவிப்பிற்கும் இப்போது அவசியம் இல்லை என்று விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அணி நிர்வாகம் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு, தொடரின் இடையில் அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே வரும் 10ம் தேதி மும்பையில் தனது முதல் போட்டியை டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.