மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி அங்கு மூன்று டி20, மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடர் வரும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வில் உள்ள இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், பும்ரா, முகமது சமி போன்ற வீரர்கள் இந்தத் தொடருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தாம் டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் பங்கு பெறவில்லை என்று பிசிசிஐக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு மேல் ஒரு இடியாக வந்திருக்கிறது இன்னொரு செய்தி. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலிருந்து விடுப்பு எடுத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாக இரண்டு மிகப்பெரிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.இதனால் இந்திய அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்கா தொடரில் கே எல் ராகுல் செயல்படுவார் என செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக கேஎல் ராகுல் டி20 தொடரில் சமீப காலமாக விளையாடவில்லை.
இதனால் தென்னாப்பிரிக்கா தொடரில் அவர் களமிறங்குவாரா இல்லை ஒரு நாள் தொடரில் மட்டும் கேப்டனாக இருப்பாரா என்று குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கே எல் ராகுல் தலைமையில் தான் இந்திய அணி விளையாடி தொடரை வென்றது. இதனால் கே எல் ராகுலுக்கு தான் முன்னுரிமை தரப்பட இருக்கிறது.
ஒருவேளை கே எல் ராகுல் டி20 போட்டியில் விளையாடுவதில்லை என முடிவெடுத்தால் சூரியகுமார் யாதவ் டி20 கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. உலகக் கோப்பையை இந்திய அணி இழந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இனி வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளில் பெரிய அளவில் விளையாடப் போவதில்லை என முடிவெடுத்திருப்பது ரசிகர்களை சோகம் அடைய செய்திருக்கிறது.