மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் திறமையை நிரூபிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடக்கவுள்ளது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருப்பதால், இந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்ற முடியும். ஆனால் தொடரை கைப்பற்றுவதை விடவும் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட் என்று 4 பேரும் அரைசதம் விளாசிவிட்டனர். அதேபோல் இஷான் கிஷன் வழக்கம் போல் அவரது பாணியில் விளையாட இந்திய அணி நிர்வாகம் பச்சைக் கொடி காட்டிவிட்டது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே இன்னும் ஃபார்முக்கு வராத ஒரே வீரராக அணியில் விளையாடி வருகிறார்.
முதல் போட்டியின் 3வது வீரராக களமிறங்கி 4 ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேறினார் ஸ்ரேயாஸ் ஐயர். அதற்கு முன் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 14 ரன்களில் வெளியேறினார். இதனால் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது பேட்டிங் ஃபார்மை நிரூபிக்க வேண்டும் தேவை எழுந்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அஸ்வின் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோருக்கு ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டிக்கு அனைத்து வீரர்களும் களமிறங்கவுள்ளனர்.
இதனால் 2வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக விளையாடவில்லை என்றால் அவருக்கு அதுவே கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம். இதுவரை இந்திய அணியின் நம்பர் 4 வீரராக 20 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள், 5 அரைசதங்கள் உட்பட 805 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாகவே காயத்தில் இருந்த மீண்டும் திரும்பிய போது உலகக்கோப்பை அணியில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டார் ஸ்ரேயாஸ் ஐயர். இதனால் இந்தப் போட்டியில் தனது திறமையை ஸ்ரேயாஸ் ஐயர் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.