
வெற்றிக்கு சிஎஸ்கே தீவிரம்
ஐபிஎல் 2021 தொடருக்காக அதன் 8 அணிகளும் சிறப்பாக தயாராகி வருகின்றன. குறிப்பாக கடந்த சீசனில் ப்ளே-ஆப் சுற்றிற்கு கூட முன்னேறாமல் தொடரிலிருந்து வெளியேறிய முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த சீசனில் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது.

இளைஞர்களின் துடிப்பு
அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வயதானவர்களின் அணி என்று கூறப்பட்டுவந்த அந்த அணியில் இந்த ஆண்டு வயதானவர்களின் அனுபவமும் இளையவர்களின் துடிப்பும் சரிவிகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அணியின் பலத்தை கூட்டும்வகையில் பல்வேறு புதிய இணைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

மும்பையில் பயிற்சி
தொடர் குறித்த அறிவிப்புக்கு முன்னதாகவே சென்னையில் தனது பயிற்சி முகாம் குறித்து அறிவித்து அதை செயல்படுத்தியும் காட்டியது சிஎஸ்கே அணி. தற்போது மும்பையில் அதன் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. மும்பையில் ஏப்ரல் 10ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே முதல் போட்டியில் மோதவுள்ளது.

ரசிகர்கள் ஆவல்
இந்நிலையில் கடந்த 2008க்கு பிறகு தற்போது அந்த அணியின் ஜெர்சி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ராணுவத்தினரை பெருமைப்படுத்தும்வகையில் ஜெர்சியின் தோள்பட்டை பகுதியில் புதிய இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

லோகோவிற்கு மேல் 3 ஸ்டார்கள்
அந்த பகுதியில் இணைக்கப்பட்டுள்ள கோல்ட் பேண்ட் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அணியின் முன் பகுதியில் லோகோவிற்கு மேலே 3 ஸ்டார்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கும் காரணம் இருக்கிறது.

வெற்றி எண்ணிக்கை
கடந்த 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் என இதுவரை ஐபிஎல்லில் 3 கோப்பைகளை சிஎஸ்கே வென்றுள்ளது. இதை குறிப்பிடும்வகையில்தான் இந்த 3 ஸ்டார்கள் ஜெர்சியில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனது வெற்றிகளை ஜெர்சியில் குறிப்பிட்டுள்ள ஒரே அணி என்ற பெருமையும் சிஎஸ்கேவிற்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











