கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரை சிறப்பாக வீசிய ஹர்ப்ரீத் ப்ராருக்கு ஏன் அடுத்த ஓவரை ஷிகர் தவான் கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசி பந்தில் ரிங்கு சிங் பவுண்டரியை விளாசி வெற்றிபெற வைத்தார். இந்த தோல்வியால் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தோல்விக்கு ஷிகர் தவானின் கேப்டன்சியே காரணமாக அமைந்துள்ளது.
கொல்கத்தா அணியின் பிரதானமாக 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியதோடு கேப்டன் நிதிஷ் ராணாவும் ஒரு ஓவரை வீசினார். மொத்தமாக சுழற்பந்துவீச்சாளர்கள் வீசிய 13 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி சேர்த்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளரான ராகுல் சஹரை இரண்டாம் பாதியில் ஷிகர் தவான் பயன்படுத்தினார். ஆனால் முதல் பாதியில் லிவிங்ஸ்டனை நம்பி சிக்கந்தர் ராசாவை அணியில் சேர்க்கவில்லை.
இத்தனைக்கும் கேகேஆர் அணியின் சுனில் நரைன் எப்படி வீசுவாரோ அப்படியே வீசக் கூடியவர் சிக்கந்தர் ராசா. அதேபோல் சிறப்பாக பந்துவீசிய ஹர்ப்ரீத் சிங் ப்ராருக்கு ஒரு ஓவருடன் நிறுத்திய ஷிகர் தவான், ரிஷி தவானையும் முழுமையாக பயன்படுத்த தவறினார். இவர்களுக்கு பதிலாக முதல் ஓவரிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த லிவிங்ஸ்டன் கைகளில் பந்தை கொடுத்தது பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதனால் ஷிகர் தவான் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல் இருந்ததே பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கேப்டன்ஷியில் மாற்றம் செய்யும் பஞ்சாப் அணி, அடுத்த ஆண்டும் கேப்டனை மாற்றும் முடிவுக்கு தள்ளப்படும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் சிறப்பாக ஆடிய அதர்வா தய்டேவை பயன்படுத்தாமல் ராஜபக்சேவை பயன்படுத்தியதும் பேட்டிங் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக சிக்கந்தர் ராசாவை சேர்த்திருந்தால் கூட பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பஞ்சாப் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும். அதேபோல் ஷிகர் தவான் கேப்டன்சியை பார்க்கும் போது, கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் கேப்டன்சியே தேவலாம் என்று ரசிகர்கள் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.