டப்ளின்: ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுவது சரியா என்பது குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று புறப்பட்டு அயர்லாந்தில் தரையிறங்கியது. கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இவரது தலைமையில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் புறப்பட்டுள்ளனர்.

ஆசிய போட்டிகளுக்கான கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொடரில் அவர் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாததால், சஞ்சு சாம்சனுக்கு 3வது வரிசையில் பேட்டிங் செய்ய 3 வாய்ப்புகள் கிடைக்கும் நிலை உருவாகும். அதேபோல் ஐபிஎல் தொடரில் அசத்திய ரிங்கு சிங் முதல்முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோருடன் ஆவேஷ் கான் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரசித் கிருஷ்ணா ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்தார். இதனால் அயர்லாந்து டி20 தொடரில் தனி வீரர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை நெருங்கும் சூழலில் அயர்லாந்து டி20 தொடர் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், அயர்லாந்து டி20 தொடர் தேவையா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் அயர்லாந்து டி20 தொடர் இந்திய அணிக்கு முக்கியமானது. ஏனென்றால் நட்சத்திர வீரர் பும்ரா 11 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் பும்ராவின் செயல்பாடுகளை எல்லாரும் கூர்ந்து கவனிக்க காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பிரசித் கிருஷ்ணாவும் காயத்திற்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஒயிட் பால் கிரிக்கெட்டில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக செயல்பட்டு வந்தவர். அவர் சிறப்பாக செயல்பட்டால், உலகக்கோப்பைக்கான 4வது வேகப்பந்துவீச்சாளராக இருக்க வாய்ப்புகள் உள்ளது. யாருக்கு முக்கியமோ, ஆனால் இவர்கள் இருவருக்கும் இந்த டி20 தொடர் மிகவும் முக்கியமானது. காயத்தில் இருந்து வந்தவர்களின் ஆட்டத்தை பொறுத்தே ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை அணி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.