சென்னை: இந்திய அணியின் ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண், யுவராஜ் சிங் போன்ற மேட்ச் வின்னர்களால் இந்திய அணி அடைந்த பயன்களை எண்ணில் அடக்கிவிட முடியாது. அதுபோன்ற மேட்ச் வின்னர்கள் தற்போது இல்லாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேட்ச் வின்னர்கள் உருவாகாததற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. கிங், ஹிட்மேன், குட்டி கோட் என்று கொண்டாடப்பட்ட யாராலும் 90 ஓவர்கள் நிலைத்து நிற்க முடியவில்லை. 90 ஓவர்கள் விளையாடி இருந்தாலே வெற்றியை பெற்றிருக்கலாம் என்ற சூழலில், முதல் செஷனிலேயே ஆல் அவுட்டாகியுள்ளது. இதன் மூலம் 9 ஐசிசி தொடர்களில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.

இந்திய அணியின் தொடர் தோல்விக்கு ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண், யுவராஜ் சிங் போன்ற மேட்ச் வின்னர்கள் இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பின் ரிஷப் பண்ட் மட்டுமே மேட்ச் வின்னராக உள்ளார். இதற்கு இந்தியாவில் கிரிக்கெட்டில் விளையாடும் இளம் வீரர்கள் உள்ளூர் போட்டிகளுக்கும், ரஞ்சி டிராபி கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், பொருளாதாரத்தை வலிமையாக்கும் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுப்பதே காரணமாக உள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஐபிஎல் தொடருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ரஞ்சி டிராபி தொடருக்கும் கொடுத்தால் தான் மேட்ச் வின்னர்கள் உருவாகுவார்கள். அதேபோல் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ உரிய கவனத்துடன் இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் இளம் வீரர்களும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அண்மை காலங்களில் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் இருந்து நேரடியாக இந்திய அணிக்கு தேர்வான வீரர்கள் யாருமே கிடையாது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களே டெஸ்ட் அணியிலும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதேபோல் கிரிக்கெட்டின் உண்மையான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டை மட்டுமே விளையாடும் புஜாரா, ஹனுமா விஹாரி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்திலும் பிசிசிஐ முன்னுரிமை கொடுப்பதில்லை.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தோல்விக்கு இங்கிலாந்து அணியிலும், நிர்வாகத்திலும் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன் விளைவாக தான் டி20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இதனால் இந்திய அணியிலும், பிசிசிஐ நிர்வாகத்திலும் பெரும் மாற்றம் நடக்காவிட்டால், அடுத்துவரும் உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வியை தான் சந்திக்கும். ஆனால் இந்திய அணி பற்றி ரசிகர்களே அதிக கவலையில் இருக்க, பிசிசிஐ தரப்பிலும் இதுவரை சேத்தன் சர்மாவுக்கு கூட மாற்று தேர்வுக் குழு தலைவரை அறிவிக்காமல் உள்ளது.