சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 200 போட்டிகளில் ஒரு அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி செயல்பட்டு சாதனை படைத்துள்ளார். தோனியின் இந்த சாதனையை வருங்காலத்தில் எந்த வீரராலும் முறியடிக்க வாய்ப்புகள் இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னையின் கேப்டனாக தோனி களமிறங்கியதன் மூலம், கேப்டனாக 200வது போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். சென்னை அணிக்காக 14வது சீசனில் கேப்டனாக விளையாடி வரும் தோனி, இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். அதேபோல் ஒரு முறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் 11 முறை சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்குள் அழைத்து சென்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் டிராக் ரெக்கார்டுக்கு தோனியின் கேப்டன்சியும் முக்கிய காரணம். அதேபோல் 200 போட்டிகளில் கேப்டனாக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள தோனியின் சாதனை எதிர்காலத்தில் எந்த வீரராலும் முறியடிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஒரு வீரர் 200 போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால், குறைந்தது 14 ஐபிஎல் சீசன்களில் விளையாடி இருக்க வேண்டும்.
தற்போது சராசரியாக 25 வயதில் ஒரு வீரரால் ஐபிஎல் தொடரில் கேப்டனாக வாய்ப்புகள் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் குறைந்தது 14 சீசன்களில் விளையாட வேண்டும் என்றால், அந்த வீரருக்கு 39 வயதை எட்டி இருக்கும். அப்போதும் ஐபிஎல் போன்ற உலகம் போற்றும் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தோனியின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரே அணியில் விளையாட வேண்டும்.

தற்போது விளையாடும் வீரர்களில் விராட் கோலியை தவிர்த்து வேறு எந்த வீரரும் ஒரே அணிக்காக விளையாடியதில்லை. ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவரும் 2021ஆம் ஆண்டுடன் கேப்டன்சியை கைவிட்டார். இதனால் இனி வரும் இளம் வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் கேப்டன்சியை கொடுக்க முன் வருமா என்ற கேள்வி எழுவதோடு, ஒரே அணியில் நீடிப்பதும் அவ்வளவு எளிதல்ல என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் எந்த வீரராலும் தோனியின் சாதனையை முறியடிக்க முடியாது என்று தெரிய வந்துள்ளது.