லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. கேப்டன் ரோகித் சர்மாவின் நடவடிக்கை சரியா என்பது பற்றி பார்க்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்ததோடு, ஒரேயொரு ஸ்பின்னரான ஜடேஜாவுடன் மட்டுமே களமிறங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட வீடியோவில், எனது ரோல், எனது பங்களிப்பு பற்றி கவலையில்லை. இந்திய அணி வெல்ல வேண்டும் என்று ஆசை என்று தெரிவித்திருந்தார்.

இருந்தாலும் எந்த பிட்ச், எந்த சூழலாக இருந்தாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர். இதனால் அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 61 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய வீரர்களிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அஸ்வின் தான். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஸ்வின் 3வது இடத்தில் உள்ளார். இவ்வளவு ஏன், கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்பின்னருக்கு சாதகமில்லாத சூழலில் கூட அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். தற்போது அஸ்வினை விடுத்து இந்திய அணி ஷர்துல் தாக்கூரை தேர்வு செய்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க ஆடுகளமும், இங்கிலாந்து வானிலையுமே காரணாம் என்பது தெரிய வந்துள்ளது.

1880ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக ஓவல் மைதானத்தில் ஜூன் மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதனால் ஆடுகளம் எப்படி செயல்படும் என்பதே தெரியாமல் இருந்தது. அதேபோல் ஆகஸ்ட் மாதத்திலேயே இங்கிலாந்தில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால் ஒரேயொரு ஸ்பின்னரோடு செல்வதே சரியான முடிவு என்று பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த முறை இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒரு போட்டியில் கூட அஸ்வின் களமிறக்கப்படவில்லை. விராட் கோலி அஸ்வினை நிரந்தரமாக வெளியிலேயே அமர வைத்திருந்தார். தற்போது மீண்டும் இங்கிலாந்தில் நடக்கும் முக்கியமான போட்டியில் அஸ்வினை தேர்வு செய்யாமல் ரோகித் சர்மா வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அஸ்வினுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.