மும்பை: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் முழுமையான உடற்தகுதியை எட்டாததால், மாற்று வீரராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசியக் கோப்பைத் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் கம்பேக் கொடுத்துள்ளதோடு, திலக் வர்மா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் நட்சத்திர ஸ்பின்னரான சாஹல் சேர்க்கப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று புரியாமல் ரசிகர்களிடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி நிர்வாகம் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை மட்டுமே பார்க்கிறது.
இந்திய அணியின் கேஎல் ராகுல் விளையாட வேண்டுமென்றால் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவது கடினம். இதனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் போதுமான உடற்தகுதியை எட்டினாலும், விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை.
அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுல் இப்போதும் தடைபிடிப்பு பிரச்சனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செப்.2ஆம் தேதி இந்திய அணி விளையாடும் முதல் போட்டி தொடங்குவதற்குள் கேஎல் ராகுல் முழு உடற்தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை கேஎல் ராகுல் உடற்தகுதியை எட்டாத பட்சத்தில் மாற்று வீரரான சஞ்சு சாம்சன் அணிக்குள் சேர்க்கப்படுவார்.
இதனால் கேஎல் ராகுல் இந்திய அணிக்காக களமிறங்குவாரா என்பது கடைசி நேரத்தில் தான் முடிவு செய்யப்படவுள்ளது. அண்மையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியை தொடங்கினாலும், விக்கெட் கீப்பிங் பயிற்சியை முழுமையாக தொடங்காதது குறிப்பிடத்தக்கது.