மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தனது அதிரடியான ஆட்டத்தாலும், சிறப்பான கேப்டன்சியாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். ஆனால், சமீபத்தில், முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், ரோஹித் சர்மாவின் ஒரு மோசமான காலகட்டம் குறித்துப் பேசியிருப்பது, கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
"ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி வெறும் 6.20 ஆக இருந்தபோதும், நாங்கள் அவரை ஆதரிக்க வேண்டியிருந்தது" என்று பதான் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இர்ஃபான் பதான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது பற்றி குறிப்பிட்டார். அந்தத் தொடரில் 3 போட்டிகளில் ஆடிய ரோஹித், வெறும் 6.20 என்ற சராசரியில் மட்டுமே ரன்கள் எடுத்திருந்தார். இது ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு கேப்டனின் மிகக் குறைந்த சராசரிகளில் ஒன்றாகும்.
இது குறித்துப் பதான் கூறுகையில், "ரோஹித் சர்மா வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட்டில் ஒரு அற்புதமான வீரர், ஆனால் அந்த டெஸ்ட் தொடரில் அவரது சராசரி 6 தான். ஒருவேளை அவர் கேப்டனாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அணியில் அவருக்கே இடம் கிடைத்திருக்காது என்பதுதான் உண்மை" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மேலும், சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா விலகியபோது, தொலைக்காட்சி நேரலைக்காக அவரை நேர்காணல் செய்த அனுபவத்தையும் பதான் பகிர்ந்து கொண்டார். "ரோஹித்தின் மோசமான ஃபார்ம் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், அவர் எங்கள் சேனலுக்கு விருந்தினராக வந்தபோது, நாங்கள் அவரை ஆதரித்து, கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஒரு கேப்டனை அழைத்து வைத்துக்கொண்டு அவரை விமர்சிக்க முடியாதல்லவா?" என்று பதான் அந்தச் சூழலை விளக்கினார்.
ஆனால், அந்த நேர்காணலின் போது ரோஹித் சர்மா, தான் நீக்கப்படவில்லை என்றும், தனது மோசமான ஃபார்ம் காரணமாகவும், அணிக்கு ஃபார்மில் உள்ள வீரர்கள் தேவை என்பதாலும், தானாகவே முன்வந்து அந்தப் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதாகவும் தெளிவுபடுத்தினார். இது அணியின் நலனுக்காக அவர் எடுத்த ஒரு தன்னலமற்ற முடிவாகப் பார்க்கப்பட்டது.
இர்ஃபான் பதானின் இந்தப் பேச்சு, ரோஹித் மீதான விமர்சனமாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக, ஒரு வீரரின் ஃபார்ம் மோசமாக இருக்கும்போது, கேப்டன் என்ற பதவி எப்படி அவருக்கு ஒரு கவசமாக இருக்கிறது என்பதையும், தொலைக்காட்சி நேரலையில் உள்ள சில நிர்ப்பந்தங்களையும் அவர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
அதே சமயம், இர்ஃபான் பதான் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பலமுறை பாராட்டியுள்ளார். "ரோஹித் போன்ற ஒரு தன்னலமற்ற கேப்டன் இந்திய அணிக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம். அவருடன் விளையாடியுள்ளேன், ஆனால் அவரின் கேப்டன்சியின் கீழ் விளையாட முடியாமல் போனது என் துரதிர்ஷ்டம்" என்றும் பதான் புகழ்ந்துள்ளார். ஒரு வீரர் சவாலான காலகட்டத்தைச் சந்திக்கும் போது, அதிலிருந்து அவர் மீண்டு வர வேண்டும் என்று பதான் ஆதரவுக் குரலும் கொடுத்துள்ளார். ஆனால், அதே பதான் இப்போது ரோஹித் சர்மா தந்த மறைமுக அழுத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.