பார்படோஸ்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவுகள் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலக வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
கரீபியன் நாடுகளில் நடைபெறும் இந்தப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்கு தவறான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது நடுவரான அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் தான் இந்த சர்ச்சைகளுக்குக் காரணம். இந்தப் போட்டியின் இரண்டு நாட்கள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், அவர் மொத்தம் ஐந்து தவறான முடிவுகளை எடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதில் ஒன்று ஆஸ்திரேலியா அணிக்குச் சாதகமாக அமைந்தது. மற்ற நான்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அமைந்தன. முக்கியமாக, மூன்று வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் வீழ்வதற்கு அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் காரணமாக இருந்தார் என்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, பந்தை எட்ஜ் செய்தார். அது ஸ்லிப் திசையில் நின்றிருந்த ஃபீல்டரால் கேட்ச் பிடிக்கப்பட்டது. ஆனால், மூன்றாவது நடுவரான அட்ரியன், பந்து கேட்ச் பிடிக்கும் முன் பிட்ச் ஆனது என்று சொல்லி நாட் அவுட் என அறிவித்தார்.
அதேபோல, கேமரான் கிரீன் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தபோது, அதையும் அட்ரியன் தவறாக இல்லை எனச் சொன்னார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ராஸ்டன் சேஸ் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக ஆஸ்திரேலியா அவுட் கேட்டது. ரீப்ளேயில் பார்த்தபோது, பந்து பேட்டில் படுவதற்கு முன்பாகவே அல்ட்ரா எட்ஜில் அதிர்வுகள் இருந்தன. ஆனால், பந்து பேட்டில் பட்டதாகச் சொல்லி அட்ரியன் அவுட் இல்லை என அறிவித்தார்.
அதன் பிறகு ராஸ்டன் சேஸ் மீண்டும் பேட்டிங் செய்தபோது, பந்தை இன்சைட் எட்ஜ் செய்திருந்தார். ஆனால், ஆஸ்திரேலியா அணி எல்பிடபிள்யூ என அவுட் கேட்டது. அப்போது மூன்றாவது நடுவர் அட்ரியன், ரீப்ளேயைச் சரியாகப் பார்க்காமல் அவுட் என அறிவித்தார். ராஸ்டன் சேஸ் தான் பந்தை எட்ஜ் செய்ததாகச் சொல்லி புலம்பிக்கொண்டே வெளியேறினார்.
உச்சகட்ட சர்ச்சை
அடுத்து நடந்ததுதான் உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் சாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்து ஆடிக்கொண்டிருந்தபோது, அவர் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பாய்ந்து சென்று கேட்ச் பிடிக்க முயற்சி செய்தார். அவர் சரியாக கேட்ச் பிடிக்கும்போது பந்து தரையில் பட்ட நிலையில் இருந்தது. ஆனால், அதை ரீப்ளேயில் பார்த்த அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், பந்து தெளிவாக கேட்ச் பிடிக்கப்பட்டதாகச் சொல்லி அவுட் என அறிவித்தார்.
இதைப் பார்த்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி மற்றும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். சமி வெளிப்படையாகவே தன் கோபத்தைக் காட்டினார். இந்த சம்பவங்களால் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அட்ரியன் வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறாரா அல்லது அவருக்கு நடுவர் செய்யத் தெரியவில்லையா என ரசிகர்கள் கேள்வி கேட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 92 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து இருக்கிறது.