பார்படாஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் கேப்டனுடனான மோதல் காரணமாக திடீரென களத்தில் இருந்து வெளியேறி ஓய்வறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்து அபார வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் அல்ஜாரி ஜோசப் தனது கேப்டன் ஷாய் ஹோப் உடன் மோதலில் ஈடுபட்டு களத்தில் இருந்து திடீரென வெளியேறி ஓய்வறைக்கு சென்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை தொடங்கிய போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் மேத்யூ போர்ட் மற்றும் அல்ஜாரி ஜோசப் இருவரும் முதல் ஸ்பெல்லை வீசினர். இதன் காரணமாக 4வது ஓவரை வீசுவதற்கு அல்ஜாரி ஜோசப் அழைக்கப்பட்டார். அப்போது பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் ஜோர்டன் காக்ஸ்-க்கு ஏற்றவாறு சில ஃபீல்ட் செட்டப்பை கேப்டன் ஷாய் ஹோப் மாற்றினார்.
ஆனால் ஷாய் ஹோப் அமைத்த ஃபீல்ட் செட்டப் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பிற்கு ஏற்புடையதாக இல்லை. அந்த ஓவரின் முதல் பந்தை வீசிவிட்டு உடனடியாக ஃபீல்ட் செட்டப்பை மாற்றுமாறு அல்ஜாரி ஜோசப் கைகளை காட்டி கேட்டார். ஆனால் ஷாய் ஹோப் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதனால் பவுலிங் செய்ய நடந்து சென்ற போதே அவர் கோபமடைந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து 2வது பந்தில் ஜோர்டன் காக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி போதும், அல்ஜாரி ஜோசப் கோபத்தில் கத்திக் கொண்டே இருந்தார். தொடர்ந்து அந்த ஓவரை மெய்டன் செய்த அவர், உடனடியாக களத்தில் இருந்து வெளியேறி ஓய்வறை நோக்கி நடந்து செல்ல தொடங்கினார். இதனை பார்த்த வர்ணனையாளர்கள், எவ்வளவு கோபம் வந்தாலும் கேப்டனுக்கு உண்டான மரியாதையை அளிக்க வேண்டும் என்று பேசினர்.
அதேபோல் பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளவில்லை. பின்னர் சில நிமிடங்களில் சக வீரர்களுடன் புகார் கூற தொடங்கிய அல்ஜாரி ஜோசப், நிழற்குடையில் கோபமக பேசி கொண்டே இருந்தார். இதனைத் தொடர்ந்து பயிற்சியாளர் டேரன் ஷமியின் வார்த்தைகளால் சமாதானமான அவர், அடுத்த ஓவரில் மீண்டும் களத்திற்கு வந்தார்.
அல்ஜாரி ஜோசப்பின் கோபம் காரணமாக ஒரு ஓவர் முழுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களுடன் களத்தில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்பின் களத்திற்கு வந்த போது அல்ஜாரி ஜோசப் அட்டாக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு ஃபீல்டிங் செய்ய பணிக்கப்பட்டார். இதனால் சூழல் இன்னும் மோசமாகுமோ என்ற கவலை ஏற்பட்டது.
பின்னர் 12வது ஓவரை வீச அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்ய அழைக்கப்பட்ட போது, அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர். கேப்டனுடன் நேரடியாக அல்ஜாரி ஜோசப் மோதலில் ஈடுபட்ட சம்பவம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் அல்ஜாரி ஜோசப் விவகாரம் குறித்து கேட்ட போதும், கேப்டன் ஷாய் ஹோப் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.