டரூபா : 2024 ஐபிஎல் ஏலத்தில் நல்ல விலைக்கு வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து வீரர் பிலிப் சால்ட்டை ஒரு ஐபிஎல் அணி கூட ஏலம் கேட்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிலிப் சால்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் சதம் அடித்து இருந்தார். அப்படி இருந்தும் ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.
இந்த நிலையில் நான்காவது டி20 போட்டியிலும் அதே போல 200 ஸ்ட்ரைக் ரேட்டில் சதம் அடித்து மிரட்டி இருக்கிறார் பிலிப் சால்ட். 10 சிக்ஸ், 9 ஃபோர் அடித்து சதம் கடந்த அவர் , தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் சதம் அடித்து தன் உச்சகட்ட ஃபார்மையும் நிரூபித்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட வீரரை ஐபிஎல் அணிகள் தவறவிட்டு விட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பே ட்விட்டரில் சுட்டிக் காட்டி இருக்கிறது. பிலிப் சால்ட் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே சதம் அடித்து இருந்த போதும் அவர் நிலையாக ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவிக்க மாட்டார் என்ற கருத்து இருந்தது. அதன் காரணமாகவே ஐபிஎல் அணிகள் அவரை புறக்கணித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், பிலிப் சால்ட் துவக்க வீரர் என்ற நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் ஏற்கனவே தங்கள் அணியில் துவக்க வீரர்கள் மற்றும் மாற்று துவக்க வீரர்களை போதிய அளவில் வைத்து இருப்பதால் அவரை வாங்காமல் போய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பிலிப் சால்ட் சதம் அடித்து 119 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 267 ரன்கள் எடுத்து தன் அதிகபட்ச டி20 ஸ்கோரை பதிவு செய்தது. ஜோஸ் பட்லர் 29 பந்துகளில் 55, லியாம் லிவிங்க்ஸ்டன் 21 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து இருந்தனர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆனது. அந்த அணியின் ஐந்து பேட்ஸ்மேன்கள் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், அனைவரும் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.