இணையதள விற்பனை
2019 உலகக்கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து சுமார் 7 லட்சம் டிக்கெட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்துள்ளது. அப்படி இணையத்தில் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அதை மட்டும் வைத்து மைதானத்துக்குள் நுழைய முடியாது.
டிக்கெட் வாங்கும் முறை
அவர்கள் மைதான வாயிலில், இணையத்தில் வாங்கிய டிக்கெட் ரசீதை கொடுத்து, மைதான நுழைவுச் சீட்டை பெற வேண்டும் அல்லது வீட்டிலேயே டிக்கெட்டை பிரிண்ட் எடுத்துக் கொண்டும் வரலாம். அதை வைத்துத் தான் மைதானத்துக்குள் அவர்கள் நுழைய முடியும்.
காத்திருந்த ரசிகர்கள்
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் இரண்டாம் போட்டிக்கும், அதே நடைமுறை பின்பற்றப்பட்டது. இந்தப் போட்டிக்கு பெருமளவில் பாகிஸ்தான் ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் டிக்கெட்டை மைதானத்தில் பெற்றுக் கொள்ள முயன்றனர். ஆனால், டிக்கெட் கொடுக்கும் ஏற்பாடுகள் சரிவர செய்யப்படாததால், அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
மோசமான ஆட்டம்
இதற்கிடையே போட்டி தொடங்கியது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கலக்கலான பந்துவீச்சில் சிக்கி பாகிஸ்தான் அணி விரைவாக விக்கெட்களை இழந்தது. 21.4 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து, 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. போட்டி மொத்தமே 35 ஓவர்களில் முடிந்து விட்டது.
கடுப்பு
பல பாகிஸ்தான் ரசிகர்கள், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழையும் போது பாகிஸ்தான் அணி 6, 7 விக்கெட்களை இழந்து இருந்தது. இதனால், கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் டிக்கெட்டை திருப்பி கேட்டதாக தெரிகிறது.
திருப்பி வழங்க திட்டம்
போட்டியை ஒருங்கிணைக்கும் குழு, தங்கள் தவறை ஒப்புக்கொண்டு, பாகிஸ்தான் சரியான நேரத்தில் டிக்கெட் கிடைக்காத பலருக்கும், டிக்கெட் தொகையை திருப்பி வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இதை ஒரு மன்னிப்பாக எடுத்துக் கொள்ளுமாறும் அவர்கள் கூறி உள்ளனர்.
இக்கட்டான சூழல் ஏன்?
ஒருவேளை பாகிஸ்தான் அணி நேற்று 50 ஓவர்களும் ஆடி இருந்தால், இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டு இருக்காது. பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங்கால் உலகக்கோப்பை தொடரை நடத்துபவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.