ராவல்பிண்டி: 34 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் படுதோல்வியை முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, அணியின் புதிய பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனை குறிவைத்து, "அவர் ஒரு நல்ல டி20 பயிற்சியாளராக இருக்கலாம், ஆனால் ஒருநாள் போட்டிகளுக்குத் தேவையான திறமை அவரிடம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை" என்று சரமாரியாக சாடியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றி வரலாறு படைத்தது. குறிப்பாக, தொடரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில், 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 92 ரன்களுக்குச் சுருண்டு 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த படுதோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் இந்த படுதோல்வி குறித்துப் பேசிய "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" சோயிப் அக்தர், அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:
"மைக் ஹெஸ்ஸன் ஒரு நல்ல டி20 பயிற்சியாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 50 ஓவர் போட்டிகளுக்கான அவரது தகுதிகள் என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒருநாள் போட்டிகளில் நீங்கள் தரமான, அனுபவம் வாய்ந்த வீரர்களை களமிறக்கவில்லை என்றால், இதுதான் நடக்கும்," என்று அவர் கூறினார்.
மேலும், "திறமையான ஆல்ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை நீங்கள் களமிறக்காத வரை, உங்களால் முழுமையாக 50 ஓவர்கள் தாக்குப்பிடிக்க முடியாது. இந்த வடிவத்தில் ஏனோதானோவென்று இருந்துவிட முடியாது" என்றும் அக்தர் எச்சரித்தார்.
இந்த தோல்விக்கு வீரர்களைக் குறை கூற விரும்பாத அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தவறான கொள்கைகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். "இது வீரர்களின் தவறல்ல, தவறான கொள்கைகளின் விளைவு. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் உங்கள் வீரர்கள் எப்போதும் திணறுவார்கள். இப்போது இந்த மறுகட்டமைப்பு என்ற பெயரில், ஒரு புதிய காம்பினேஷனை உருவாக்குகிறோம் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்," என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
"நல்லவேளையாக, இந்தத் தொடரில் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற பந்துவீச்சாளர்கள் இல்லை. அப்படிப்பட்ட சூழல் எங்கு நிலவினாலும், நமது வீரர்கள் அம்பலப்பட்டுப் போவார்கள்," என்றும் அவர் கடுமையாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்றோர் தங்களது அனுபவத்தைப் பயன்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லத் தவறுகிறார்கள் என்றும் அக்தர் சுட்டிக்காட்டினார்.
1991ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 34 ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தான் அணியை ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்றுத் தோல்வி, பாகிஸ்தான் அணியின் தேர்வு மற்றும் பயிற்சியாளர் நியமனம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.