அகமதாபாத்: சொந்த மண்ணில் சென்னை அணிக்கு 5வது ஐபிஎல் கோப்பையை ஜடேஜா வென்று கொடுத்துள்ள நிலையில், மைதானத்தில் இருந்த அவரின் மனைவி ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், சேஸிங்கை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதையடுத்து சென்னை அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

சொந்த மண்ணில் ஜடேஜா சென்னை அணிக்காக வெற்றிபெற்ற பின், மைதானம் முழுக்க ஓடிச் சென்று வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜடேஜா, முதல்முறையாக குஜராத் மண்ணில் ஐபிஎல் போட்டியை வெல்வதோடு, சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார். இந்தப் போட்டியை காண ஜடேஜாவின் மனைவி மைதானத்திற்கு வந்திருந்தார். ஜடேஜாவின் ஆட்டத்தை பார்த்து எமோஷனலான அவர், ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
