ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனென்றால் ஆர் சி பி இன்று ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவினால் சி எஸ் கே மற்றும் லக்னோ அணிகள் கடைசி போட்டியில் வெல்லாமலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடுவார்கள்.
இதனால் இன்றைய போட்டியை ஆர்சிபி ரசிகர்களை விட இவ்விரு அணி ரசிகர்களும் தான் பெரும் எதிர்பார்ப்புடன் அமர்ந்து பார்ப்பார்கள். இந்த நிலையில் டாஸ் வென்ற ஆர் சி பி கேப்டன் டூப்ளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இது குறித்து பேசிய அவர் கடந்த இரண்டு நாட்களாக நாங்கள் பயிற்சி செய்த போது பனிப்பொழிவு அதிகம் இருந்தது. இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது பந்து பேட்டிற்கு நன்றாக வரும். நாங்கள் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பிராஸ்வெல் அணியில் இருப்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வலுப்படுத்தி இருக்கிறது.
நாங்கள் இன்றைய ஆட்டத்தை புதிதாக தொடங்க இருக்கிறோம். அடிப்படையான விஷயங்களை சரியாக செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஹசரங்கா மற்றும் ஹேசல்வுட் ஆகியோருக்கு லேசான காயம் இருக்கிறது. அவர்கள் இன்னும் நூறு சதவீதம் உடல் தகுதியை எட்டவில்லை என்று டுபிளசிஸ் கூறியுள்ளார்.இதை தொடர்ந்து பேசிய ஹைதராபாத் கேப்டன் மார்க்கரம், நாங்கள் இன்று ஆட்டத்தில் பேட்டிங்கை தேர்வு செய்ய தான் இருந்தோம்.
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் பலமாக இருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் இரண்டு மாற்றங்கள் செய்திருக்கிறோம். ஹாரி புருக் மற்றும் கார்த்திக் தியாகி இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பெருமைக்காக விளையாடுவோம். எங்கள் அணி வீரர்கள் இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டுமென்ற உத்வேகத்தில் இருக்கிறார்கள் என ஏய்டன் மார்க்கரம் கூறினார்.