
கெய்ல் எவ்வழியோ..
எப்போதெல்லாம் கெய்ல் சிறப்பாக ஆடுகிறாரோ அப்போதெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் நன்கு விளையாடுகிறது. கெய்ல் நடையை கட்டினால், பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு செல்கின்றனர் பிற வீரர்களும்.

புயல் தாக்கும் அபாயம்
எனவே வரும் ஆறாம் தேதி பெர்த் மைதானத்தில் இந்தியாவுக்கு எிதராக நடைபெற உள்ள போட்டியிலும் கெய்ல் புயலையே முழுமையாக நம்பிக் கொண்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ். இந்த புயல் தாக்க ஆரம்பித்தால் தப்பிப்பது கடினம் என்பதை இந்திய கேப்டன் டோணியும் புரிந்து வைத்துள்ளார்.

ரன் தராமல் இருக்கனுமே..
எனவே கெய்ல் விக்கெட்டை முதலில் வீழ்த்திவிட வேண்டும் என்பதில் டோணி குறியாக உள்ளார். கெய்லை ரன் அடிக்க விடாமல் கட்டைபோடச் செய்தால் போதுமானது. அவரே பொறுமையிழந்து மட்டமான ஷாட்டுகளை ஆடி அவுட் ஆகி நடையை கட்டிவிடுவார் என்று நினைக்கிறது டோணி அன்ட் கோ. கெய்ல் விக்கெட்டை உடனடியாக வீழ்த்துவது எப்படி என்பதுதான் இப்போது எஞ்சி நிற்கும் கேள்வி. ஆனால் டோணியின் மூளைக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு இந்திய பவுலிங் வீக்காக இல்லை என்பதை கடந்த சில மேட்சுகளை பார்த்தவர்கள் நன்கு உணர்வார்கள்.

பவுலிங் விஸ்வரூபம்
உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கும் முன்பாக எந்த ஒரு கிரிக்கெட் பண்டிதருமே, இந்திய பவுலிங்கை பற்றி நல்லதாயா் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஆனால் பாகிஸ்தானை 224 ரன்களிலும், தென் ஆப்பிரிக்காவை 177 ரன்களிலும் இந்திய பவுலிங் சுருட்டிய விதத்தை பார்த்த பிறகுதான் வாய் பிளந்தனர்.

டோணியின் நம்பிக்கை நட்சத்திரம்
தென் ஆப்பிரிக்கா தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 339 ரன்களும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 408 மற்றும் அயர்லாந்துக்கு எதிராக 411 ரன்களும் குவித்துள்ளது. இதில் இருந்தே, இந்திய பவுலிங்கின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளலாம், முகமது ஷமி வேகப்பந்து வீச்சில் கலக்கி வருகிறார். ஆனால் டோணி நம்பியிருப்பது வேறு ஒரு சகாவைத்தான் என்கிறது டீம் இந்தியா வட்டாரம்.

அஸ்வின்
டோணியின் நம்பிக்கைக்குறிய அந்த துருப்பு சீட்டு வேறு யாருமல்ல, இந்தியாவின் தற்போதைய ஒரே முழு நேர சுழற்பந்து வீச்சாளரான, ரவிச்சந்திரன் அஸ்வின். கிறிஸ் கெய்ல் புயலுக்கு அணை கட்ட அஸ்வினைத்தான் பயன்படுத்த போகிறாராம் டோணி. டோணி நினைப்பதை நடத்தி முடிப்பவர் அஸ்வின். ஆனால் "அதெல்லாம் உள்நாட்டில் மட்டும்தான், வெளிநாட்டு பிட்சுகளில் அஸ்வின் மேஜிக் செல்லாது" என்று நினைத்தவர்கள் முகத்தில் கரி பூசியுள்ளார் அஸ்வின்.

முதல் ஓவரில் அஸ்வின்
உலக கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் மொத்தம் 28 ஓவர்கள் வீசியுள்ள அஸ்வின், 8 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அவரது ரன் சராசரி 4-க்கும் கீழேதான் உள்ளது. உலக கோப்பையின் மிகச்சிறந்த சிக்கன பந்து வீச்சாளர்களில் அஸ்வின் முன்னணியில் உள்ளார். எனவே, ஓப்பனிங்கில் இறங்கும் கெய்லுக்கு எதிராக முதல் ஓவரை அஸ்வினை வைத்து வீசச் சொல்ல டோணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சவாலுக்கு அஸ்வின் ரெடி
ஆஸ்திரேலிய ஆடுகளங்களை அஸ்வின் என்ஜாய் செய்ய ஆரம்பித்துள்ளது அவரது பேட்டியில் இருந்து தெரியவருகிறது. யு.ஏ.இ போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அஸ்வின் "ஆஸ்திரேலிய பிட்சுகளில் பந்து நன்கு எழும்பி வருகிறது. இதை நான் மிகவும் ரசிக்கிறேன். பந்து வீசும்போது, எனது மணிக்கட்டு பகுதியின் பொசிசனை மாற்றியமைத்து பயிற்சி எடுத்துள்ளேன். எனவே 'ஆர்ம் பால்' போன்ற பந்துகளை எளிதாக வீச முடிகிறது" என்றார். ஓகே.. யுத்தத்துக்கு இந்தியா ரெடி..


Click it and Unblock the Notifications











