புனே : ஐசிசி உலகக் கோப்பையில் இன்று இந்தியாவும் வங்கதேசமும் பல பரிட்சை நடத்துகிறது. வங்கதேசம் இந்தியாவை விட பலம் குன்றிய அணியாக கருதப்பட்டாலும், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான இருதரப்பு தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இதனால் நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுமா இல்லை வங்கதேசம் அணி அதிர்ச்சி அளிக்குமா என்பது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி தடுமாறியபோது இஷான் கிஷன் தான் கடைசி ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி இரட்டை சதம் அடித்தார். அதன் பிறகு உலகக் கோப்பை தொடரில் இசான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் கில் அணிக்குள் வந்தவுடன் இசான் கிஷன் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக இஷான் கிஷன் சிறப்பாக விளையாடிய வரலாறு இருப்பதால் அவரை பிளேயிங் லெவனுக்கு கொண்டுவர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. புனே கிரிக்கெட் மைதானம் ஒரு புறம் பவுண்டரி தூரம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் இடது கை பேட்ஸ்மேன்கள் அதனை குறி வைத்து ரன்களை எடுக்க முடியும்.
இதேபோன்று சூரியகுமார் யாதவும் நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இன்னும் ஒரு வாய்ப்பை கூட பெறவில்லை. இதனால் வங்கதேசத்துக்கு எதிராக சூரியகுமார் மற்றும் இஷான் கிஷனை நடு வரிசையில் பயன்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் யோசனை வழங்கியிருக்கிறார்கள்.ஆனால் இந்திய அணி பிளேயிங் லெவனை தேவையில்லாமல் மாற்றாது என்பது உண்மைதான்.
அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அரை சதம் அடித்திருக்கிறார். இதனால் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர்தான் இடம் பெறுவார். எனினும் இஷான் கிஷன் வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை அணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கலாம். இன்னும் சொல்லப்போனால் ஷர்துல் தாக்கூர் கடந்த போட்டியில் இரண்டு ஓவர்கள் தான் வீசினார். இதனால் அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனை இந்தியா சேர்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.