டுபிளின் : ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதாரண வீரராக பெஞ்சில் அமர்ந்து கொண்டு தற்போது சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் என்ற ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் ருதுராஜ்.
சென்னை அணியின் மறுமலர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இப்படி பல்வேறு திறமைகளை ருதுராஜ் வைத்திருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் தொடர்ந்து வீணடித்து வருகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் ருதுராஜ், இதுவரை இந்திய அணிக்காக 11 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 27 ரன்கள் தான் அடித்திருக்கிறார் இதேபோன்று ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 135 ரன்கள் தான் ருதுராஜ் சேர்த்திருக்கிறார்.
இதில் அதிகபட்சமாக 57 ரன்கள் அடங்கும். இப்படி பல திறமைகள் இருந்தும் ருதுராஜ் கெய்க்வாட் சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அயர்லாந்து தொடரில் ஒரு சிறப்பான வாய்ப்பு அமைந்திருக்கிறது. சீனியர் வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட அயர்லாந்து தொடரை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் தள்ளப்பட்டு இருக்கிறார்.

திறமை இருந்தும் ஏன் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் திலக் வர்மா, கில் போல் ஜொலிக்கவில்லை என ரசிகர்களும் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் என்ற அந்தஸ்தும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கேப்டன் என்ற அந்தஸ்தும் ருத்ராஜ்க்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ருதுராஜ் கெய்க்வாட் காப்பாற்ற வேண்டும் என்றால் அயர்லாந்து தொடரில் குறைந்தது இரண்டு அரைசதமாவது அடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஐபிஎல் மட்டும்தான் ருதுராஜ் புலி, சர்வதேச அரங்கில் அவர் வெறும் எலி தான் என்று ரசிகர்கள் முத்திரை குத்தி விடுவார்கள்.