டி20 தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் வரும் 24ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளன. தொடர்ந்து அதே மைதானத்தில் டி20 தொடரின் 5 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
12ம் தேதி முதல் போட்டி
இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 12ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் அறிமுக வீரர்களாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ராகுல் டிவாட்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
இந்நிலையில் முன்னதாக இவர்கள் நான்கு பேருக்கும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் இடம்பெற்று தோள்பட்டை காயம் காரணமாக விளையாட முடியாமல் போன வருண் சக்ரவர்த்தியின் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் சச்சின் டெண்டுல்கர்.
ஆசிர்வாதமாக எடுத்து கொள்கிறேன்
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு வருண் சக்ரவர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவரது வாழ்த்துக்களை எப்போதும் ஆசிர்வாதங்களாக தான் எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சூர்யகுமார், இஷான் கிஷன் மற்றும் டிவாட்டியா ஆகியோருக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.