மும்பை : 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட்டுக்காக மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் கடுமையாக போட்டி போட்டன.
இறுதியில் தனக்கு கையிருப்பில் இருந்த 2.25 கோடியில், 2 கோடியை ஏல விலையாக சொல்லி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அந்த வீராங்கனையை வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
டெல்லி அணிக்காக ஏலத்தில் கலந்து கொண்ட கங்குலி விடாப்பிடியாக இருந்து அன்னாபெல்லை வாங்கும் வரை விடாமல் விலையை ஏற்றிக் கொண்டே சென்றார். அதனால், 2.1 கோடி மட்டுமே வைத்து இருந்த மும்பை இந்தியன்ஸ் 2 கோடியை எட்டியதும் இனி விலை கேட்க முடியாது என்ற நிலையில் வேறு வழியின்றி பின்வாங்கியது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் பேட்டிங் செய்ய நல்ல நட்சத்திர வீராங்கனை இல்லை என்ற நிலை இருந்தது. அதை போக்கவே கங்குலி அதிரடியாக களத்தில் குதித்து ஆல் - ரவுண்டர் அன்னாபெல்-ஐ வாங்கி இருக்கிறார். அவர் கடந்த சீசனில் சரியாக செயல்படாத போதும், மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் 304 ரன்கள் மற்றும் 21 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
கடந்த சீசனில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்ற அன்னாபெல் 4 போட்டிகளில் ஆடி 28 ரன்கள் மற்றும் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதனால், குஜராத் அணி அவரை விடுவித்தது. ஆனால், அவர் தற்போது ஃபார்மில் இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் முட்டி மோதின. இறுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்திய ஆல் - ரவுண்டர் காஷ்வீ கௌதமுக்கும் ஏலத்தில் கடும் போட்டி இருந்தது. அவரை வாங்க குஜராத் ஜெயன்ட்ஸ் - உபி வாரியர்ஸ் அணிகள் மோதிய நிலையில், இறுதியில் குஜராத் அணி அவரை 2 கோடிக்கு வாங்கியது. இந்த ஏலத்தில் அதிக விலையாக 2 கோடியை பெற்ற இரண்டு வீராங்கனைகள் இவர்கள் மட்டுமே.