மும்பை: இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த அதே நேரம், இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஒரு செயல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதிய இறுதிப் போட்டியின்போது, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீதா அம்பானியின் அருகே அவர் அமர்ந்து இருந்தார். அப்போது அவர் செய்த விஷயம் தான் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மகளிர் உலகக்கோப்பை 2025-இன் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியைக் காண கிரிக்கெட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் மைதானத்தில் குழுமியிருந்தனர்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் விஐபி அறையில் அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகில் நீதா அம்பானியும் அமர்ந்திருந்தார். போட்டியின் விறுவிறுப்பான தருணத்தில், நீதா அம்பானி தனது மொபைல் ஃபோனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ரோஹித் சர்மா, ஆர்வத்துடன் அவரது ஃபோன் திரையை பலமுறை எட்டிப் பார்த்தார்.
இந்தக் கலகலப்பான தருணம், தொலைக்காட்சி கேமராக்களில் பதிவாகி, நொடிப்பொழுதில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து, வேடிக்கையான மீம்ஸ்கள் மற்றும் கமெண்ட்களால் தெறிக்கவிட்டனர். "மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த ஏலப் பட்டியலை நீதா மேடம் பார்க்கிறார்களா என ரோஹித் சரிபார்க்கிறார்" என்றும், "இப்ப மெசேஜ் பண்ணாத, ரோஹித் பக்கத்துல இருக்கான்!" என்றும் ரசிகர்கள் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய ஆண்கள் அணி, நீண்ட நாள் ஐசிசி கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 2024 டி20 உலகக்கோப்பையையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், ரோஹித் சர்மா தனது பேட்டிங்கில் தனித்து விளங்கினார். மூன்று போட்டிகளில் 202 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும், தனது கிரிக்கெட் பயணத்தில் முதல் முறையாக ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.
வரும் நவம்பர் 30-ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.