ஆசிய மகளிர் கோப்பை - 8வது முறையாக இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி..தாய்லாந்தை 74 ரன்களில் சுருட்டியது
செல்ஹெட் : ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி 8வது முறையாக தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தாய்லாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
கேப்டன் ஹர்மன்பிரித் அணிக்கு திரும்பினார். தொடக்க வீராங்கனையாக செஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர்.

நல்ல தொடக்கம்
தொடக்க வீராங்கனை செஃபாலி வர்மா 28 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். ஸ்மிருதி மந்தனா 3 பவுண்டரிகள் அடித்தாலும் 13 ரன்களில் வெளியேறினார். ஜேமிமா ரொட்ரிகியுஸ் 27 ரன்கள் சேர்க்க, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மட்டும் நிலைத்து நின்று ஆடி 30 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார்.

149 ரன்கள் இலக்கு
பூஜா வஸ்தகார் 17 ரன்கள் எடுக்க, மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்க தவறினர். இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
தொடக்க வீராங்கனை நானாபட் 5 ரன்களும், நத்தகன் சாந்தன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சாய்வாய் 41 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை சேர்த்தார். சோர்னாரின் 5 ரன்களிலும், சாண்டியா ஒரு ரன்னிலும் வெளியேறினர். இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தாய்லாந்து வீராங்கனைகள் தடுமாறினர்.

74 ரன்கள்
நாட்டாயா 21 ரன்கள் எடுக்க, மற்ற வீராங்கனை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் தாய்லாந்து மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 4 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 8வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications