"அதுக்கும் மேல" .. இந்திய அணியிடம் நிறைய எதிர்பார்க்கும் சச்சின்!
மெல்போர்ன்: இந்திய அணி தனது முதல் இரு போட்டிகளிலும் விளையாடிய விதம் தன்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும், அதேசமயம் இன்னும் நிறைய தான் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் சூப்பர் ஸ்டார் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
தனக்கு மகிழ்ச்சிதான் என்ற போதிலும் கூட திருப்தி ஏற்படவில்லை என்றும் சச்சின் கூறியிருக்கிறார். பாகிஸ்தான், தென் ஆப்பிரி்க்காவை நமது அணி வீழ்த்தியுள்ளதை நாடே கொண்டாடி வரும் நிலையில் சச்சினுக்கு அதில் திருப்தி இல்லை என்பது ஆச்சரியம் தருவதாக உள்ளது.
இதுகுறித்து சச்சின் மெல்போர்னில் கூறியது:-

இன்னும் நிறைய
உலகக் கோப்பையில் இந்திய அணியின் இது வரையிலான ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த வெற்றிகளால் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னும் நான் திருப்தி அடையவில்லை. இந்திய அணியிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன். இந்திய வீரர்கள் இந்த வெற்றியை தொடர வேண்டும்.

அவர்களால் முடியும்
அவர்களால் இன்னும் சிறப்பாக ரன் குவிக்க முடியும். ஏனெனில், அவர்களின் உண்மையாக திறமை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அருமை
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் மிக அருமையாக அமைந்திருந்தது. கடைசி கட்ட ஓவர்களில் இன்னும் கொஞ்சம் ரன் சேர்த்திருக்கலாம். ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் தென் ஆப்ரிக்க அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

தவான் சிறப்பு
ஷிகர் தவான் மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளார். இந்த பார்மை அவர் தொடர வேண்டும் என விரும்புகிறேன். இந்த இன்னிங்ஸ்களால் அவரது தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர் அவர் என்று நான் ஏற்கனவே கணித்திருந்தது உண்மையாகிவிட்டது.

ரஹானே அமர்க்களம்
இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் விசேஷமான விஷயம் என்னவென்றால், நான்காவது வீரராக வந்து அமர்க்களப்படுத்திய அஜிங்கியா ரஹானே தான். கொஞ்சம் கூட தடுமாறாமல் சந்தித்த முதல் பந்தில் இருந்தே இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் வேகம் அதிகரிக்க உதவினார். ஸ்டெயின் பந்துவீச்சில் அவர் அடித்த ஷாட் அற்புதமாக இருந்தது.

அரை கிணறுதான் தாண்டியிருக்கிறோம்
உலக கோப்பை என்பது பெரிய தொடர். அதில் சிறப்பாக தொடங்கியிருப்பது என்பது அரை கிணறு தாண்டியது போலதான். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். வெற்றியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைய முடியும்.

தன்னம்பிக்கையுடன் ஆடுங்கள்
தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் விளையாடினால் வெற்றி என்பது ஒரு பழக்கமாகவே மாறிவிடும். நெருக்கடியான கட்டத்திலும் பதற்றம் அடையாமல் விளையாட அது வெகுவாக உதவும் என்றார் சச்சின்.


Click it and Unblock the Notifications