சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் டாப் 3 வீரர்களான இஷான் கிஷன், ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களுக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 200 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி களமிறங்கியது. இஷான் கிஷனை ஸ்ட்ரைக்கில் விடாமல் ரோகித் சர்மாவே ஸ்ட்ரைக்கை எடுத்துக் கொண்டார். இதன் பின் முதல் ரன்னை லெக் பைஸாக எடுக்க, இஷான் கிஷன் ஸ்ட்ரைக்கில் வந்தார். அப்போது ஸ்டார்க் வீசிய 4வது பந்தில் இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேறினார். சேப்பாக்கம் பிட்ச்-சிற்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல் பேட்டை சுழற்றியதே இஷான் கிஷனின் விக்கெட்டுக்கு காரணமாக அமைந்தது.
தொடர்ந்து 2வது ஓவரை வீச ஹேசல்வுட் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 3வது பந்தை இன் ஸ்விங்கராக ஹேசல்வுட் வீச, அது ரோகித் சர்மாவின் கால்களை பதம் பார்த்தது. இதனால் நடுவர் அவுட் என்று கொடுக்க, ரிவ்யூ செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி ரோகித் சர்மாவும் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணியின் ஸ்கோர் 2-2 என்ற கால்பந்து ஸ்கோரை போல் காணப்பட்டது. இதன்பின் நம்பர் 4 வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.
இவராவது விராட் கோலிக்கு கம்பெனி கொடுப்பார் என்று பார்க்கப்பட்ட நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்திலேயே ஸ்ரேயாஸ் ஐயர் என்ன ஷாட் ஆடுகிறோம் என்பதே தெரியாமல் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதேபோல் இந்திய அணியின் டாப் 3 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறியதால், சேப்பாக்கம் மைதானமே மயான அமைதிக்கு சென்றது.