சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஆட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்றிரவிலும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தின் Black Soil பிட்சில் ஆட்டம் நடக்கவுள்ளதால், வெற்றியில் ஸ்பின்னர்களின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோருடன் 3வது ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூட, ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்துவீச்சாளராகவே பார்ப்பதாக ரோகித் சர்மா கூறி இருந்தார். ஏனென்றால் அவரால் 140 கிமீ வேகத்திற்கும் அதிகமாக தொடர்ச்சியாக பந்துவீச முடிகிறது.
இதனால் 3 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற கலவையுடன் இந்திய அணி களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரோகித் சர்மாவே கூறி இருந்தார். இதனால் சொந்த மண்ணில் அஸ்வின் களமிறங்குவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனால் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு ரசிகர்கள் சேப்பாக்கத்தில் அஸ்வின் விளையாடுவதை பார்க்க ஆவலாக உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரி என்று இரு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அஸ்வினின் பங்கு அவசியமாகிறது. இந்த நிலையில் பிளேயிங் லெவனில் அஸ்வின் இருப்பார் என்பதை இன்னொரு சம்பவம் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற பயிற்சியின் போது கூட ரவிச்சந்திரன் அஸ்வின் கால்களில் பேடை கட்டிக் கொண்டு பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். அதன்பின் சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி முறையாக உலகக்கோப்பையில் விளையாடவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.