கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாச வேண்டும் என்று சுயநலமாக விளையாடியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்திய அணி வீரர் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கான புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 101 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் சேர்த்தனர்.

பிறந்த நாளான இன்று சதம் விளாசியதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுகரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி. அதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் செய்த சாதனையை, விராட் கோலி வெறும் 277 இன்னிங்ஸ்களிலேயே செய்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.
அதேபோல் ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விராட் கோலி அடிக்கும் 5வது இதுவாகும். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். இதனால் ஒரேயொரு இன்னிங்ஸ்களில் இத்தனை சாதனைகளா என்ற ராசிகர்கள் வியந்து வருகின்றனர்.
இதுகுறித்து விராட் கோலி பேசுகையில், இந்த ஆடுகளத்தில் பேட்டிங் ஆடுவது புதிரான ஒன்றாகும். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இணைந்து சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். அதனை தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டிய எனது பொறுப்பாக இருந்தது. ஆனால் 10வது ஓவருக்கு பின் பந்து நன்றாக திரும்ப தொடங்கியது. அதேபோல் ஆடுகளத்தில் திடீரென ரன்கள் சேர்ப்பதும் கடினமாக ஒன்றாக அமைந்தது. அதனால் கடைசி வரை ஆட்டத்தை எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.
மற்ற வீரர்கள் அனைவரும் என்னை சுற்றி ஆடினார்கள். அணி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு அதுதான் அறிவுறுத்தப்பட்டது. ஸ்ரேயாஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் கடைசி நேரத்தில் அதிரடியாக சில ரன்களை குவித்தோம். நானும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆசிய கோப்பை தொடரின் போது நிறைய பேசி இருக்கிறோம். நான் 3வது வரிசையிலும், அவர் 4வது வரிசையிலும் ஆடுவதால், எங்களின் பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
அதேபோல் ஹர்திக் பாண்டியா அணியில் இல்லை. அதனால் ஒன்று அல்லது இரு விக்கெட்டுகளை விரைந்து இழந்தால் எங்களுக்கு பிரச்சனை வரும் என்று தெரியும். அதனை கடைசி வரை ஆட வேண்டிய சூழல் தேவைப்பட்டது. இந்திய அணியின் வெற்றியில் ஒரு அங்கமாகவும், கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கொடுத்ததற்காகவும் கடவுளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பிறந்தநாளன்று இவ்வளவு ரசிகரக்ள் முன்னிலையில் சதம் விளாசியது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆடுகளம் ஸ்லோவாக இருப்பதோடு, எங்களின் பவுலிங் அட்டாக் வலிமையாக இருக்கிறது. ஆனால் வெற்றிக்காக நிச்சயம் போராட வேண்டும். நிச்சயம் விக்கெட்டுகள் வீழ்த்துவது தான் வெற்றிக்கான வழி. சில விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்துவதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு அழுத்தத்தை கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.