மும்பை: மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக 87 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷபாலி வர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்படாத நிலையில், ஒரேயொரு காயம் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றி இருக்கிறது.
மகளிர் உலகக்கோப்பையை தொடரை முதல்முறையாக இந்திய அணி வென்றுள்ளது. இதுவரை மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வென்றதே கிடையாது. தற்போது சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரை சொந்த ரசிகர்கள் முன்னிலையில் வைத்து ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு நட்சத்திர இளம் வீராங்கனை ஷபாலி வர்மா முக்கியக் காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா 87 ரன்களை விளாசியதோடு, பவுலிங்கில் முக்கிய வீராங்கனைகளான லூயில் மற்றும் கேப் ஆகியோரின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் ஷபாலி வர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது, அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஷபாலி வர்மாவின் இடத்தில் இளம் வீராங்கனை பிரத்திகா ராவல் தேர்வு செய்யப்பட்டார். அவரும் அசத்தலான ஆட்டத்தை தொடக்க வீராங்கனையாக களமிறங்கி வெளிப்படுத்தினார்.
6 இன்னிங்ஸில் ஆடிய அவர் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 308 ரன்களை விளாசினார். ஆனால் அரையிறுதிக்கு முன்பாக பிரத்திகா ராவலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இந்திய அணிக்கு வேறு வழியில்லாததால் ஷபாலி வர்மாவை தேர்வு செய்தனர். ஷபாலி வர்மா ஆடிய முதல் போட்டியே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டிதான்.
அந்தப் போட்டியில் ஷபாலி வர்மா 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். பவுலிங்கிலும் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை. ஆனால் இறுதிப்போட்டியில் தேவையான நேரத்தில் ஷபாலி வர்மா தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். 16 வயதிலேயே இந்திய அணிக்குள் வந்த ஷபாலி வர்மா, இந்திய அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்துள்ளார்.
இதனால் ஒரேயொரு காயம் இந்திய அணியின் தலையெழுத்தையே மாற்றியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரத்திகா ராவலும் நல்ல ஃபார்மில் இருந்தார் என்றாலும், ஷபாலி வர்மா இருக்கையில் எதிரணிக்கு ஒரு அச்சம் இருக்கும். ஏனென்றால் 45 நிமிடங்கள் களத்தில் இருந்தால், ஆட்டத்தின் தலைவிதியை மாற்றக் கூடிய ஷபாலி வர்மா. இன்று இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தை மாற்றிக் காட்டியுள்ளார்.