மழையால் ஆட்டம் ரத்து: டி20 உலக கோப்பையின் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது நெதர்லாந்து
தரம்சலா: உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டம் மழையால் ரத்தானதால், நெதர்லாந்து அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
ஆறாவது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூர், தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 'ஏ' பிரிவில் வங்காள தேசம், ஓமன், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப் 'பி' பிரிவில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி முதன்மை சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில் இன்று தரம்சலாவில் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஓமன்-நெதர்லாந்து அணிகள் மோத இருந்தன. ஓமன் அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தும் முனைப்பில் ஓமன் வீரர்கள் தீவிரமாக இருந்தனர். அதே நேரத்தில் வங்க தேசத்திடம் வீழ்ந்த நெதர்லாந்து இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ஆனால் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஓவர்கள் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் போட்டியை தொடங்க முடியாத அளவிற்கு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டது. எனவே, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பை நெதர்லாந்து இழந்துள்ளது.


Click it and Unblock the Notifications