தர்மசலாவிலிருந்து கொல்கத்தாவுக்கு இடம் மாறியது இந்தியா - பாக். உலகக் கோப்பைப் போட்டி
கொல்கத்தா: இமாச்சலப் பிரதேச அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறிவிட்டதைத் தொடர்ந்து தரம்சலாவில் நடத்தத் திட்டமிட்டிருந்த இந்தியாவுக்கு எதிரான டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியை கொல்கத்தாவுக்கு ஐசிசி மாற்றியுள்ளது.
மார்ச் 19ம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு தர முடியாது என்று இமாச்சலப் பிரதேச அரசு கூறி விட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றுமாறு ஐசிசிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து தற்போது போட்டி இடம் மாற்றப்பட்டுள்ளது.

கொல்கத்தாவுக்கு
முன்னதாக மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியில் கொல்கத்தாவை பிசிசிஐ இறுதி செய்தது. இதையடுத்து போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி தலைவர் டேவ் ரிச்சர்ட்சன் அறிவித்துள்ளார்.

கொல்கத்தாவே சரிப்படும்
முன்னதாக இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், லாஜிக்படி பார்த்தாலும், பாதுகாப்புஅம்சத்தைக் கணக்கெடுத்தாலும் கொல்கத்தாதான் சரியான இடமாகும். மேலும் ஒளிபரப்பு சாதனங்களை தரம்சலாவிலிருந்து பெங்களுக்கு எடுத்துச் செல்வதை விட கொல்கத்தாவே பக்கமானது என்று கூறியிருந்தார்.

2 வார்ம் அப் போட்டிகள்
உண்மையில் தரம்சலா போட்டிக்கு முன்பாக கொல்கத்தாவில் 2 வார்ம் அப் போட்டிகளில் பாகிஸ்தான் மோத திட்டமிட்டப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 12ல் பெங்கால் அணிக்கு எதிராகவும், 14ம் தேதி இலங்கைக்கு எதிராகவும் அது மோதத் திட்டமிடப்பட்டிருந்தது.
மார்ச் 16ல் இன்னொரு போட்டி
அதேபோல மார்ச் 16ம் தேதி ஏ பிரிவிலிருந்து சூப்பர் 10 பிரிவுக்குத் தகுதி பெறும் அணியுடன் மோதுவதாகவும் உள்ளது. இந்த நிலையில் தனது அனைத்துப் போட்டிகளையும் கொல்கத்தாவிலேயே அது ஆடவுள்ளது.
மார்ச் 22ல் மொஹாலி
தனது கடைசிப் போட்டியாக மார்ச் 22ம் தேதி மொஹாலி மைதானத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மோதும் பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டி கொல்கத்தாவில்தான்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்தான் ஏப்ரல் 3ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications