கொல்கத்தா: கொல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த டி20 உலகக் கோப்பையின் வார்ம் அப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ரோஹித் சர்மாவின் அபார ஆட்டம் பெரிதும் உதவியது.
டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய வார்ம் அப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தியாவின் வெற்றிக்கு ரோஹித் சர்மாவின் அபார ஆட்டம் பேருதவியாக இருந்தது.
முன்னதாக ஈடன் கார்டன் மைதானத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் 264 ரன்கள் குவித்த ரோஹித் நேற்று 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் என மொத்தம் 98 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ரோஹித் 57 பந்துகளில் 98 ரன்களை எடுத்தார். காயத்தால் விளையாடாமல் இருந்த முகமது ஷமி நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களுக்கு பந்து வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்திய அணியை தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் ஜான்சன் சார்லஸ் முதல் மூன்று ஓவர்களில் 36 ரன்கள் எடுத்தனர். ஆனால் அவர்களை ஜஸ்ப்ரித் பும்ரா அவுட்டாக்கி மேற்கிந்திய தீவுகளின் வேகத்தை குறைத்தார்.
அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் வரிசையாக அவுட்டாகினர். மைதானத்தில் அடித்து விளையாடு, இல்லை அவுட்டாகிவிடு என்ற நோக்கோடு விளையாட வந்திருப்பார்கள் போல. இறுதியாக 19.2 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் ஆல் அவுட் ஆகினர்.