மும்பை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நடுவே உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவரில் 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி 2வது அரையிறுதியில், டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் சம்மி, பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியில் இரு மாற்றம் செய்யபட்டது. யுவராஜ்சிங்கிற்கு பதிலாக மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டது. தவானுக்கு பதில் ரஹானே சேர்க்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆப்கன் போட்டியில் ஓய்வெடுத்த கிறிஸ் கெயில் இப்போட்டியில் களமிறங்கினார். காயத்தால் அவதிப்பட்ட பிளட்சருக்கு பதில் சிம்மன்ஸ் களமிறங்கினார்.
இதையடுத்து ரோகித் ஷர்மாவும், ரஹானேவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டிகளை போலன்றி, இம்முறை இந்தியா பவர் பிளே ஓவர்களில் அடித்து ஆடியது. அடித்து நொறுக்கிய ரோகித் ஷர்மா 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பத்ரே பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்
முதல் 6 ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது. இந்த தொடரில் இதுதான் இந்தியாவால் பவர் பிளேயில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும். நிதான ஆட்டம் மூலம் 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த ரஹானே ஆன்ட்ரே ரசல் பந்து வீச்சில், பவுண்டரி லைனில், பிராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து கோஹ்லியுடன், கேப்டன் டோணி ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய விராட் கோஹ்லி 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் விளாசியது. கோஹ்லி 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசியும், டோணி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தும் கடைசி வரை களத்தில் நின்றனர்.
கோஹ்லி இன்னிங்சில் 1 சிக்சரும், 11 பவுண்டரிகளும் கிடைத்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டும் என்று கணிக்கப்பட்ட இந்தியா, ரஹானே, டோணி ஆகியோரின் நிதான ஆட்டத்தால் 192 ரன்கள் எடுத்தது.
இந்தியாவின் ஆட்டத்தை தொடர்ந்து 193 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு முதல் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் விளாசிய கெயில், 2வது ஓவரின் முதல் பந்திலேயே பும்ரா பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த சாமுவேல்ஸ், நெஹ்ராவின் பந்தை சரியாக கணிக்காமல் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார்.

இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்து வந்த சிம்மன்ஸும், தொடக்கவீரராக இறங்கிய சார்லஸும் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். இதனிடையே அஸ்வின் வீசிய பந்துவீச்சில் 18 ரன்களில் அவுட்டானார் சிம்மன்ஸ். அந்த பந்து வீசிய விதம் குறித்து சந்தேகமடைந்த நடுவர், மூன்றாவது நடுவரிடம் விசாரித்தார். மூன்றாவது நடுவர் அதை நோ-பால் என அறிவிக்க தப்பி பிழைத்தார் சிம்மன்ஸ்.
பின்னர் விராட் கோஹ்லி வீசிய முதல் பந்திலேயே சார்லஸ் வெளியேறினார். அவர் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசினார். பாண்டியா வீசிய 15-வது ஓவரிலும் மீண்டும் அவுட்டானார் சிம்மன்ஸ். இந்த முறையும் நோ பால் என அறிவிக்க, அந்த ஓவரில் மேற்கு இந்திய தீவுகள் அணி 18 ரன்களை குவித்தது.
கடைசி நான்கு ஓவரிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வீசிய பூம்ரா முதல் மூன்று பந்துகளை ரன் ஏதும் விட்டுக் கொடுக்கவில்லை. அடுத்த மூன்று பந்துகளில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசினார் சிம்மன்ஸ்.

கடைசி இரு ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியா வெற்றி பெற சிறு வாய்ப்பு இருப்பதாத தெரிந்தது. ஜாடேஜா வீசிய 19-வது ஓவரின் 5-வது பந்தை சிக்ஸருக்கும், ஆறாவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் ரஷல். கடைசி ஓவரில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விராட் கோஹ்லி பந்து வீச வந்தார். நான்காவது பந்தை சிக்ஸருக்கு தூக்கி ஆடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார் ரஷல்.
மேற்கு இந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 82 ரன்கள் குவித்தார். அவர் 7 பவுண்டரிகளையும், 5 சிக்ஸர்களையும் விளாசினார். ரஷல் 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். 83 ரன்கள் குவித்த சிம்மன்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.