புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் களத்திற்கு உள்ளே சர்ச்சைகள் நடைபெறும் என்று பார்த்தால் மைதானத்தில் ரசிகர்களால் பல்வேறு சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இது இந்திய தேசத்திற்கு தலைக்குணி வை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் வீரரிடம் அத்துமீறி நடந்து கொண்டது. மத ரீதியான முழக்கங்களை கிரிக்கெட் போட்டிகளில் எழுப்பியது என பல பிரச்சனைகளை இந்த உலகக் கோப்பை கண்டது.

அந்த வகையில் அண்மையில் பெங்களூருவில் நடந்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியா போட்டியில் பாகிஸ்தான் ரசிகரை பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கத்தக்கூடாது என்று போலீசார் தடை விதித்தது போன்ற பல பிரச்சனைகள் கிளம்பியது. இந்த நிலையில் அதற்கு எல்லாம் மேலாக தற்போது புனேவில் நடைபெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தியாவும் வங்கதேச அணியும் கடந்த வியாழக்கிழமை புனேவில் விளையாடினர்.
இதில் விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்த வங்கதேச ரசிகர்களை இந்திய ரசிகர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. மேலும் வங்கதேச ரசிகர்கள் வைத்திருந்த புலி பொம்மையை புடுங்கி அதனை கிழித்து இந்திய ரசிகர்கள் சேதப்படுத்தியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதை அடுத்து அந்த கிழிந்த பொம்மையை மிகவும் சோகமாக அந்த வங்கதேச ரசிகர்கள் எடுத்துச் செல்கிறார். இதேபோன்று வங்கதேச ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்து வந்த இந்திய ரசிகர்கள் சிலர் அவரை வெறுப்பேற்றும் வகையில் முழக்கம் விட்டு செல்கின்றனர். அந்த ரசிகர்கள் சென்றவுடன் அவர் மனம் வேதனை அடைந்து அழும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக இருந்த இந்தியா தற்போது விருந்தினராக வந்திருக்கும் பிற நாட்டு ரசிகர்களிடம் அத்துமீறி நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர். வங்கதேச ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வங்கதேச நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.