அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றியை அம்பாதி ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதையடுத்து சென்னை அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.]
இந்த வெற்றிக்கு சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். பவர் பிளேவில் வெளுத்த ருதுராஜ், கான்வே, மிடில் ஓவர்கள் அதிரடி காட்டிய ரஹானே, மோகித் சர்மா ஓவரில் சிஎஸ்கே பக்கம் ஆட்டத்தை திருப்பிய ராயுடு, ரஷித் கான் ஓவரில் சிக்சர் விளாசிய துபே என்று ஒவ்வொரு பேஸ்மேன்களும் சிஎஸ்கே வெற்றிக்கு பங்களிப்பு செய்துள்ளனர். இதனால் இந்த வெற்றி தனி நபரின் வெற்றியாக அல்லாமல் சென்னை அணியின் வெற்றியாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வெற்றிக்கு பின் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், கடந்த ஐபிஎல் சீசன் மோசமானதாக அமைந்ததால், இந்த சீசன் எல்லோருக்கும் ஸ்பெஷலானது. வழக்கம் போல் ஸ்டைலாக கம்பேக் கொடுத்திருக்கிறோம். சேப்பாக்கம் மைதானத்தில் வென்றதோடு, அவே போட்டிகளிலும் வென்றிருக்கிறோம். அதேபோல் அணியின் அனைத்து வீரர்களுமே வெற்றியில் பங்களித்திருக்கிறோம். ரஹானே, கான்வே என ஏராளமான வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள்.
அம்பாதி ராயுடுவுக்கு போதுமான பந்துகள் விளையாடுவதற்கு கிடைக்கவில்லை. இந்த வெற்றியையும், கோப்பையையும் ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனென்றால், இன்று கூட சிறந்த தொடக்கத்தை கொடுப்பது பற்றி ஆலோசித்தோம். எங்களிடம் விக்கெட்டுகள் இருந்ததால், 13வது ஓவரிலேயே வெல்வோம் என்று நினைத்தேன். ஆனால் கடைசி ஓவரின் கடைசி பந்தில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.