பெங்களூர் : இந்தியாவின் மகளிர் ஐபிஎல் தொடரை விட குறைவான ரசிகர்களே பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை பார்த்து வருவதாகக் கூறி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் ஐபிஎல் தொடருக்கு இணையாக ஒரு டி20 தொடரை உருவாக்க வேண்டும் என போட்டி போட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு, பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற டி20 தொடரை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த தொடரிலும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த சீசனில் பல வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்க விரும்பாமல் விலகினர்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஒளிபரப்பு உரிமையில் பல்வேறு குழப்பங்கள் நடந்து ஒருவழியாக அந்த தொடர் துவங்கியது. இந்த நிலையில் அந்த போட்டிகளை நேரில் காண வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
அதே சமயம் தற்போது இந்தியாவில் பெங்களூர் நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஐபிஎல் தொடரை காண அரங்கு நிறைந்த அளவுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மேலும், ரசிகர்கள் பெரிய அளவுக்கு ஈடுபாடு காட்டி வருகின்றனர். அதனால், மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வங்கதேசம் வெளிநாட்டு வீராங்கனைகளும் கூட தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், ஒரே புகைப்படத்தில் மகளிர் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடைபெற்ற மைதானத்தில் கூறி இருந்த ரசிகர்களை சுட்டிக் காட்டி சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். இத்தனைக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாபர் ஆசாம், ஷஹீன் அப்ரிடி, முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முன்னணி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று ஆடி வருகின்றனர். ஆனாலும், அங்கு ரசிகர் கூட்டம் குறைவாக உள்ளது.
இந்தியாவில் மகளிர் ஐபிஎல் தொடருக்கே இப்போது தான் வரவேற்பு கிடைக்கத் துவங்கி இருக்கிறது. அதன் ரசிகர் கூட்டத்துக்கே பாகிஸ்தான் சூப்பர் லீகால் ஈடு கொடுக்க முடியாத நிலையில், ஐபிஎல் தொடருக்கு இணையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் வர முடியாது என்பதே உண்மை.