நவி மும்பை: மகளிர் ஐபிஎல் (WPL) தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி ஆட்டம் ஆடினார். இமாலய இலக்கான 193 ரன்களைத் துரத்திய மும்பை அணிக்கு, நங்கூரமாய் நின்று வெற்றியைத் தேடித்தந்துள்ளார் ஹர்மன்ப்ரீத். இவரது அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டிஒய் பாட்டீல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்குத் துவக்கம் சிறப்பாகவே இருந்தது. முதல் 10 ஓவர்களில் ஓவருக்கு 10 ரன்கள் என்ற விகிதத்தில் அதிரடியாக ரன் குவித்தனர்.

ஆனால், மிடில் ஓவர்களில் மும்பை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க, ரன் வேகம் பாதியாகக் குறைந்தது. அடுத்த 6 ஓவர்களில் ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆட்டத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த குஜராத் நிர்வாகம் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தது. களத்தில் இருந்த ஆயுஷி சோனியை 16-வது ஓவருக்குப் பிறகு 'ரிட்டையர்ட் அவுட்' முறையில் வெளியேற்றி, அதிரடி வீராங்கனை பாரதி ஃபுல்மாலியை களமிறக்கியது. இது அணிக்குக் கைகொடுத்தது.
பாரதி ஃபுல்மாலி களமிறங்கியதுமே வானவேடிக்கை காட்டினார். வெறும் 15 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களை விளாசினார். மறுமுனையில் ஜார்ஜியா வேர்ஹாம் 33 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 24 பந்துகளில் இந்த ஜோடி 56 ரன்களைச் சேர்த்தது. இதனால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
குஜராத் அணியின் நட்சத்திர வெளிநாட்டு வீராங்கனைகளான பெத் மூனி, சோஃபி டிவைன் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், உள்ளூர் வீராங்கனையான ஃபுல்மாலியின் இந்த கேமியோ அந்த அணிக்கு நம்பிக்கையை அளித்தது.
193 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 5 ஓவர்களுக்குள் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. இந்த இக்கட்டான சூழலில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமன்ஜோத் கவுர் ஜோடி இணைந்தது.
இந்த ஜோடி நிதானமாகவும், அதே சமயம் தேவைப்படும்போது அதிரடியாகவும் ஆடி 3-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. அமன்ஜோத் கவுர் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுபுறம் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஆட்டத்தின் முக்கியத் தருணத்தில், ஹர்மன்ப்ரீத் 45 ரன்களில் இருந்தபோது ஆயுஷி சோனி கேட்ச் ஒன்றைக் கோட்டைவிட்டார். இது குஜராத் அணிக்கு வினையாக முடிந்தது.
கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஹர்மன்ப்ரீத், 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்குத் துணையாக நிக்கோலா கேரி 23 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மகளிர் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 8-0 என்ற கணக்கில் முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.