சென்னை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே மீண்டும் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அந்த அணிக்கு கேப்டனாக கம்மின்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் துணை கேப்டன் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.
அதேபோல் ஐபிஎல் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணியிம் ரஹானே, மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் சூழலில், சிறந்த ஃபார்மில் இருக்கும் ரஹானே இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் உனாத்கட்டும் இந்திய அணியில் நீடிக்கிறார்.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎல் ராகுல், பரத், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், உனாத்கட்.