மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இலங்கை அணியால் மிகப்பெரிய ஆபத்து இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே தகுதி பெறும்.
தற்போது இந்திய அணி 74.24 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 62.5 வெற்றி சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும் இலங்கை அணி 55.56 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த மூன்று அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பறிபோய் விட்டது.

இந்த சூழலில் பைனலில் இந்தியா நேரடியாக தகுதி பெற வேண்டும் என்றால் எஞ்சிய பத்து போட்டிகளில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்டிலும் வென்றிருக்கிறது.
இதன் காரணமாக தற்போது இலங்கை அணி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. ஒருவேளை இலங்கை அணி நியூஸிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று இருந்தால் இந்திய அணி குறைந்தபட்சம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலே போதும் என்ற நிலைமை வந்திருக்கும்.
ஆனால் தற்போது இந்திய அணி எஞ்சியிருக்கும் 10 டெஸ்ட் போட்டிகளில் ஏழு டெஸ்ட் போட்டிகளில் வென்றால் மட்டுமே நேரடியாக தகுதி பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் இந்தியா வங்காளதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்ற நிலையில் தற்போது எஞ்சியிருக்கும் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஐந்தில் வெல்ல வேண்டும்.
இதில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெறுகிறது. கடந்த முறை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் போது இந்தியா ஒரு போட்டியில் டிராவை கண்டது. இதனால் வரும் 16ஆம் தேதி தொடங்க உள்ள மூன்று டெஸ்டிலும் இந்தியா வெல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா குறைந்தபட்சம் இரண்டு டெஸ்ட்களில் வெல்ல வேண்டும்.
ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டிகள் வெல்வது என்பது மிகவும் கடினமாகும். இந்த சூழலில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்று தோற்றாலும் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டுமென்றால் இலங்கை அணி இனிவரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவ வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, இலங்கை அணி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுவதும் தோல்வியை தழுவினால் மட்டுமே இந்தியா பைனலுக்கு செல்ல முடியும்.