கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 150 ரன்கள் என்ற இலக்கை எல்லாம் 13.1 ஓவரில் எல்லாம் ரொஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது.
கேகேஆர் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் சென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணி வீரர்களும் உள்ளனர். இதனையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியில் வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்தார்.

நிதிஷ் ரானா 22 ரன்கள், குர்பாஷ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர்.
முதல் ஓவரை நிதிஷ் ரானா வீசினார். இதில் ருத்ரதாண்டவம் ஆடிய ஜெய்ஷ்வால் 2 சிக்சர், 3 பவுண்டரிகளை முதல் ஓவரில் மட்டுமே அடித்து 26 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து பட்லர் ரன் அவுட்டாக, அரை பற்றி கொஞ்சமும் கூட கவலைப்படாத ஜெயஷ்வால், ஏகே 47 ஐ கையில் கொடுத்து எதிரிகளை சுடு என்று சொல்வது போல் பந்துவீச்சாளர்களை சுளுக்கு எடுத்தார்.
இதன் மூலம் 13 பந்தில் அரைசதம் அடித்த ஜெய்ஷ்வால், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம், ஐபிஎல் 16வது சீசனில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் போன்ற சாதனைகளை ஜெய்ஷ்வால் படைத்தார். இதே போன்று கேப்டன் சஞ்சு சாம்சனும், ஜெய்ஷ்வாலுக்கு டஃப் கொடுத்து ரன்களை அதிரடியாக சேர்த்தார்.
எதோ பேருந்து, ரயிலை பிடிப்பதற்காக வேலையை சீக்கிரம் முடிக்க நினைக்கும் நம்மை போல், ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று வெறிக் கொண்டு விளையாடினர். இதனால் 47 பந்தில் 98 ரன்களை ஜெய்ஷ்வால் விளாசினார். ,இதில் 13 பவுண்டரிகளையும், 5 சிக்சர்களையும் ஜெய்ஷ்வால் விளாசினார். இதே போன்று சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 13.1 வது ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் ரன் ரேட் 0.63 என்ற அளவில் எகிறி, 3வது இடத்திற்கு சென்றது. கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பும் இதோடு கானல் நீரானது.