ஸ்லோ ரன் ரேட்
இப்போட்டியில் வழக்கம் போல் சென்னை அணியின் ஓப்பனர்கள் டு பிளசிஸ், கெய்க்வாட் நிதானமான தொடக்கத்தை ஏற்படுத்தினர். நிதானம் இருந்ததே தவிர, அதிரடியாக விளையாட முடியவில்லை. ஓரளவுக்கு ராஜஸ்தான் பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்து வீசினர். முதல் 5 ஓவர்களில் சென்னை அணி, விக்கெட் இழப்பின்றி 34 ரன்களே எடுத்திருந்தது. ரன் ரேட் 6க்கு அருகில் தான் இருந்தது. எனினும் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி எடுத்திருந்த டு பிளசிஸ், தெவாட்டியா ஓவரில் இறங்கி வந்து ஆட முயன்ற போது, சரியாக கணிக்கத் தவறி 25 ரன்களில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, வெறும் 3 ரன்களில் தெவாட்டியா ஓவரில் சிக்ஸ் அடிக்க எண்ணி கேட்ச் ஆனார். இத்தொடரில் ரெய்னாவின் மோசமான ஃபார்ம் மீண்டும் தொடருகிறது. சென்னை பிளே ஆஃப் முன்னேறிவிட்டதால், மீதமுள்ள லீக் போட்டிகளில் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. பிறகு தொடக்கம் முதலே சற்று ஸ்லோவாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 14 ஓவரில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. குறிப்பாக, 14வது ஓவரை வீசிய க்ளென் ஃபிலிப்ஸ் அந்த ஓவரில் வெறும் 3 ரன்களே விட்டுக் கொடுத்தார். இதனால், கடைசி 6 ஓவர்களில் எவ்வளவு ரன் சென்னை அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
விளாசிய ஜடேஜா
அதற்கு ஏற்றார் போல் 14.1, 14.2 என்று அடுத்தடுத்த பந்தை கெய்க்வாட் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால், அந்த ஓவரின் நான்காவது பந்தில் மொயீன் அலி, 21 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. மொயீன் அலிக்கு பிறகு அணியில் களமிறங்கியவர் அம்பதி ராயுடு. தோனி களமிறங்கி தனது ஃபார்மை மீட்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தோனி ராயுடுவையே களமிறக்கினார். எனினும், கெய்க்வாட் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16வது ஓவரை வீசிய ஆகாஷ் பந்தில், 98 மீட்டரில் ஒரு அபார சிக்ஸரை கெய்க்வாட் பறக்கவிட்டார். அதேசமயம், ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் சகாரியா ஓவரில் தூக்கி அடித்த ராயுடு 2 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 17 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பிறகு களமிறங்கிய ஜடேஜாவும் ராஜஸ்தான் பவுலர்களை ஒரு கை பார்த்தார். 19 ஓவர்களில் சென்னை 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.
190 ரன்கள் இலக்கு
கடைசி ஓவரை முஸ்தாபிசூர் வீசினார். இதில் முதல் பந்து பவுண்டரி, இரண்டாவது பந்து சிக்ஸ், மூன்றாவது பந்து பவுண்டரி, நான்காவது பந்து சிங்கிள் என்று முதல் நான்கு பந்தில் 15 ரன்கள் விளாசினார் ஜடேஜா. ஆனால் 5வது டாட் பாலாக, கடைசி பந்தை மெகா சிக்ஸருக்கு விளாசிய ருதுராஜ், 60 பந்துகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அந்த சிக்ஸ் 105 மீட்டர்கள் பறந்தது. இறுதியில். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது
19 பந்துகளில் அரைசதம்
ஆனால், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சென்னை பவுலர்களை திக்கற்று நிக்க வைத்துவிட்டனர். குறிப்பாக, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆயிரம் வாலா பட்டாசு போல வெடித்துத் தள்ளிவிட்டார். 21 பந்துகளில் அரைசதம் அடித்து, சிஎஸ்கே பவுலர்களை கலங்க வைத்துவிட்டார். அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று யெல்லோ ஆர்மி பவுலர்கள் திணறிவிட்டனர். ஒருக்கட்டத்தில் அவர் அடித்த அடியைப் பார்த்து, அவருக்கு பந்து வீசவே பயந்தனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் வீசிய 5வது ஓவரில், மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரி என வெடித்துத் தள்ளிவிட்டார். 19 பந்துகளில் தனது அரைசதத்தையும் அவர் நிறைவு செய்தார்.
வெற்றிப் பெற வாய்ப்பு
அந்த அணி 5 ஓவர்களில் 75 ரன்கள் குவித்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு, லெவிஸ் 27 பந்துகளில் தாகூர் ஓவரில் அவுட்டாக, கேஎம் ஆசிஃப், தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அரைசதம் அடித்த யஷஸ்வியை 51 ரன்களில் வெளியேற்றினார். 143 கி.மீ வேகத்தில் வந்த பவுன்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி அவர் வெளியேறினார். எனினும், ராஜஸ்தான் அணி 8 ஓவர்களுக்கெல்லாம் 95 ரன்கள் எடுத்துவிட்டது. கிட்டத்தட்ட வெற்றிக்கு தேவையான பாதி ரன்களை எட்டிவிட்டது. இதனால், ராஜஸ்தான் இப்போட்டியில் வெற்றிப் பெறவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.