கொஞ்சம் கூட ஈகோ இல்ல.. ரோகித் பாய் தான் எனக்கு சொல்லி தந்தார்.. சதம் ரகசியம் குறித்து ஜெய்ஸ்வால்
சென்னை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 219 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 28.4 ஓவர்களில் எட்டி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த சிறப்பான இன்னிங்ஸிற்குப் பிறகு, தனது கவனம், அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் ரோஹித் சர்மா அளித்த ஆதரவு குறித்து ஜெய்ஸ்வால் மனம் திறந்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனக்குக் குறைந்த அளவிலான வாய்ப்புகளே கிடைத்து வரும் நிலையில், கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி பெரிய ஸ்கோர்களை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக ஜெய்ஸ்வால் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த 9 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

"தொடக்கத்தை வீணடிக்க விரும்பவில்லை" - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இது குறித்துப் பேசிய 24 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், "நான் இந்த ஆட்டத்தை மிகவும் ரசித்து விளையாடினேன். தொடக்கத்தில் பவர்பிளே ஓவர்களில் சில ரன்கள் கிடைத்ததால், ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்று விளையாட வேண்டும் என்று விரும்பினேன். எனது கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களின் ஆதரவு எனக்குத் தொடர்ந்து கிடைக்கிறது. அவர்களின் தகவல் பரிமாற்றம் மிகவும் தெளிவாக இருப்பதால், அணியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது" என்றார்.
"எனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முயன்றேன். கிரிக்கெட்டில் நம்முடைய நாள் சிறப்பாக அமையும் போது, அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். சமீபகாலமாக சில போட்டிகளில் நான் கடுமையாக முயன்றும் என்னால் ரன் குவிக்க முடியவில்லை. ஆனால் இன்று எனது கவனத்தை சிதறவிடாமல், ஒரு ரன் வீதம் எடுத்து விக்கெட்டை தக்கவைத்துக் கொள்ள உறுதியாக இருந்தேன்" என்று தெரிவித்தார்.
ரோஹித் சர்மாவிடம் பெற்ற ஆலோசனைகள்
முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு குறித்துப் பேசிய ஜெய்ஸ்வால், "ரோஹித் பையா எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். அவரிடம் நான் பல சந்தேகங்களைக் கேட்டு, அவற்றை எனது ஆட்டத்தில் செயல்படுத்த முயற்சிப்பேன். இன்றைய போட்டியிலும் என்னால் ரன் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது அவரிடம் ஆலோசனை கேட்டேன்.
அப்போது அவர் என்னை ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யுமாறும், ரன் குவிக்கும் வேகத்தைக் குறைக்காமல் விளையாடுமாறும் அறிவுறுத்தினார். அவரது அந்த ஆலோசனை எனக்குப் பெரிதும் உதவியது. அவருடன் இணைந்து விளையாடுவதை நான் எப்போதும் பெருமையாகக் கருதுகிறேன்" என்றார்.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 86 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் எடுத்து தனது 2-வது ஒருநாள் சர்வதேச சதத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
