மும்பை : இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக 2024 ஆம் ஆண்டு அமைந்தது. காரணம் கடைசியாக இந்திய அணி t20 உலக கோப்பையை வென்றது. 2007 ஆம் ஆண்டு அதன்பிறகு ஐசிசி உலக கோப்பையை வென்றது.2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணி ஐசிசி தொடரின் சாம்பியன் பட்டம் வென்றது.
2013 ஆம் ஆண்டு அதன் பிறகு இந்திய அணியால் ஒருமுறை கூட இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. 2017 சாம்பியன்ஸ் கோப்பை, 2021- 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023- 50 உலக கோப்பை என அனைத்திலும் இறுதிப்போட்டி வரை வந்து இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதனால் நமக்கு தோனி இல்லாமல் ஐசிசி கோப்பையே கிடைக்காதா என்ற விரக்தியில் ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று ஜெய்ஷா ரசிகர்களுக்கு உறுதி அளித்திருந்தார். கோலியும், ரோகித் சர்மாவும் இந்த வாய்ப்பை தவறவிட்டால் இனி நமக்கு வாய்ப்பே கிடைக்காது என்ற உறுதியுடன் இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வந்தனர்.
அனுபவமும் இளம் வீரர்களும் கலந்த கலவையாக டி20 அணி தேர்வு செய்யப்பட்டது. இதற்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்தார். டிராவிட்டும் இதுவரை ஐசிசி கோப்பையை சீனியர் அணி வீரர்கள் வைத்து வென்றதில்லை என்பதால் இதுதான் தமக்கு கடைசி வாய்ப்பு என்றும் அவரும் கூறியிருந்தார். ஐபிஎல் தொடருக்கு பிறகு நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பலரும் நல்ல பார்மில் இருந்தனர்.
இதில் முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி எளிதில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்றது.இதில் இந்திய அணி 119 ரன்களில் சுருண்டது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றியின் அருகே வந்தபோது பும்ரா அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அதன் பிறகு நம்மால் இம்முறை உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு கிடைத்தது. லீக் சுற்றில் இந்திய அணி தோல்வியை தழுவாமல் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய சூப்பர் 8 சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் கேப்டன் ரோகித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் எட்டு சிக்சரும் ஏழு பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மட்டும் அபாரமாக விளையாடினாலும் மற்ற வீரர்கள் துணை நிற்காததால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டு வெளியேறியது. இதனை அடுத்து அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. இதிலும் ரோகித் சர்மா தொடக்க வீரராக 39 பந்துகளில் 57 ரன்களும், சூரியகுமார் 47 ரன்களும் எடுக்க இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 171-ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இந்திய அணியின் அபார சுழற் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 103 ரன்களில் ஆட்டம் இழ்ந்தது.
இதன் மூலம் 2022 டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழி தீர்த்துக் கொண்டது. இதன் பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்று தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது. இந்தத் தொடர் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாத விராட் கோலி ஃபைனலில் 59 பந்துகளை எதிர் கொண்டு 76 ரன்கள் விளாசினார்.
யாரும் எதிர்பாராத வகையில் அக்சர் பட்டேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுக்க சிவம் துபே 27 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றியின் அருகே சென்றபோது ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் சூரியகுமார் பிடித்த கேட்ச் ஆல் டேவிட் மில்லர் ஆட்டம் இழந்தார். இதேபோன்று ஹர்திக் ஓவரில் அதிரடியாக விளையாடிய கிளாசன் ஆட்டமிழக்க வெற்றியின் அருகே வந்த தென்னாப்பிரிக்க அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் இந்திய அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக ஐ சி சி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு முடிவை அறிவித்தனர். பல நாளாக காத்திருந்த கனவை 2024 ஆம் ஆண்டு இந்திய ரசிகர்களுக்கு நிறைவேற்றி கொடுத்தது.