மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இது குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் நீண்ட காலம் ஆடியிருக்க வேண்டும் என்றும், சிறந்த வீரர்கள் 50 வயது வரை விளையாட வேண்டும் என்றும் ஆவேசமாக கூறியிருக்கிறார். மேலும், இளம் வீரர்களை மட்டுமே கொண்ட அணி சரியாக விளையாடாது, சரிவைச் சந்திக்கும் எனவும் எச்சரித்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணி அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மூத்த வீரர் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தனர். இதில் விராட் கோலியின் ஓய்வு யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், அதற்கு மாறான முடிவை எடுத்தார்.

இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு இதேபோல பல வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள், ஓய்வு பெறக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அப்போது சரிவைச் சந்தித்த அணி, இப்போது வரை எழுந்து நிற்கவே இல்லை என யோக்ராஜ் சிங் கூறி இருக்கிறார்.
யோக்ராஜ் சிங் கூறியிருப்பதாவது: "விராட் கோலி மிகப்பெரிய வீரர். அவர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு. 2011ஆம் ஆண்டு பல வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள், ஓய்வு பெறக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அப்போது சரிவைச் சந்தித்த அணி இப்போதும் எழுந்து நிற்கவில்லை.
யுவராஜ் சிங்கிடம் கூட நான் 'நீ ஓய்வு பெறுவது சரியில்லை' என்று சொன்னேன். ஒருவர் நடக்க முடியாத போதுதான் ஆடுகளத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும். ஒரு அணியில் முற்றிலும் இளம் வீரர்கள் மட்டுமே இருந்தால், அந்த அணி சரிவைச் சந்திக்கும்.
விராட் கோலி 'தான் இன்னும் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை' என்று நினைத்து இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், ரோகித் சர்மா இன்னும் விளையாடி இருக்க வேண்டும். ரோகித் சர்மாவுக்கு ஒரு ஆள் எப்போதும் உடன் இருந்து அவரை ஊக்குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, காலை 5 மணிக்கு எழுந்து ஓட வேண்டும் என அவருக்கு யாராவது சொல்ல வேண்டும்.
ரோகித் மற்றும் வீரேந்தர் சேவாக் மிகவும் முன்பாகவே தங்கள் ஓய்வை அறிவித்துவிட்டார்கள். மிகச் சிறந்த வீரர்கள் 50 வயது வரை விளையாட வேண்டும். இந்த ஓய்வுகளால் நான் மிகவும் சோகமாக இருக்கிறேன். இளம் வீரர்களுக்கு ஊக்குவிப்பு அளிப்பதற்கு இப்போது யாரும் இல்லை" இவ்வாறு யோக்ராஜ் சிங் பேசியிருக்கிறார்.