சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் உடற்தகுதி மற்றும் எதிர்காலம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் அவருக்கு வலுவான ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். ரோஹித் சர்மாவால் 45 வயது வரை கிரிக்கெட் விளையாட முடியும் என்றும், இந்திய அணிக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் அவரது சேவை தேவை என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவர் விரைவில் நீக்கப்படலாம் என செய்திகள் பரவின. அவரது உடற்தகுதி குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள யோக்ராஜ் சிங், "ரோஹித்தின் உடற்தகுதி குறித்துப் பேசுபவர்களுக்கு கிரிக்கெட்டே தெரியாது" என்று சாடியுள்ளார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான கடினமான போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றதைச் சுட்டிக்காட்டிய யோக்ராஜ், "அந்த ஒரு இன்னிங்ஸ் போதும், ரோஹித்தின் தரம் என்னவென்று தெரிவதற்கு. ஒரு பக்கம் ரோஹித்தின் பேட்டிங், மறுபக்கம் மற்ற வீரர்களின் பேட்டிங். அந்த ஆட்டம், அவரால் 45 வயது வரை ஏன் விளையாட முடியும் என்பதை நிரூபித்தது," என்றார்.
ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாட பிசிசிஐ உதவ வேண்டும் என்று வலியுறுத்திய யோக்ராஜ் சிங், ஒரு படி மேலே சென்று, "தேவைப்பட்டால், நான்கு பேரை நியமித்து, ரோஹித்தை தினமும் காலையில் 10 கிலோமீட்டர் ஓட வையுங்கள். அவர் இன்னும் 5 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "ரோஹித் போன்ற வீரர்கள் வைரங்கள். அவர்களை அணியிலிருந்து தூக்கி எறியக்கூடாது. நான் பயிற்சியாளராக இருந்தால், இதே வீரர்களை வைத்து யாராலும் வெல்ல முடியாத ஒரு அணியை உருவாக்குவேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா தனது உடற்தகுதியையும், ஃபார்மையும் தக்க வைத்துக் கொள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் யோக்ராஜ் சிங் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து விளையாடுவதன் மூலம் உடற்தகுதியுடன் இருக்க முடியும் என்பது அவரது கருத்தாக உள்ளது.
இந்திய அணியின் தூணாக விளங்கிய ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாகப் பேசப்படும் சூழலில், யோக்ராஜ் சிங்கின் இந்த நம்பிக்கையும், ஆதரவும் ரோஹித் சர்மாவின் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அதே சமயம் 45 வயது வரை ரோஹித் சர்மா ஆட வேண்டும் என அவர் கூறியதை சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.