லண்டன்: கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி 400 ரன்களை கூட எளிதாக சேஸ் செய்யும் போது 450 ரன்கள் இலக்கு வைத்தாலும் யாருக்கு வெற்றி என்பதை எளிதாக சொல்லிட முடியாது என்று இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இந்திய அணியை 296 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ததன் மூலம் 173 ரன்கள் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. இதையடுத்து 3ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. இதனால் 296 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இருப்பதால், 4ஆம் நாளில் குறைந்தது 150 ரன்களையாவது சேர்க்க வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணி பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் அசத்திய இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஷர்துல் தாக்கூர் கூறுகையில், கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. எந்த அணிக்கு எதிராகவும் எது சரியான இலக்கு என்று யாராலும் சொல்ல முடியாது. அதிலும் ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டியில் எந்த அணியால் அழுத்தத்தை நன்றாக சமாளிக்க முடிகிறதோ, அந்த அணியல் வெற்றிபெற முடியும். ஒரேயொரு பார்ட்னர்ஷிப் சரியாக அமைந்தால் 450 ரன்களை கூட சேஸிங்கில் எட்டிப்பிடிக்க முடியும்.
கடந்த முறை நாங்கள் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய போது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து சுமார் 400 ரன்கள் இலக்கை எளிதாக சேஸ் செய்து அசத்தியது. அதனால் எங்களின் மனநிலை பாசிட்டிவாகவே உள்ளது. ஆஸ்திரேலிய அணி என்ன இலக்கை நிர்ணயிக்கப் போகிறது என்பது தெரியாமல், யார் வெல்வார்கள் என்று சொல்வது சரியாக இருக்காது என்றே கருதுகிறேன். ஏனென்றால் ஒரு மணி நேரத்தில் ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டியையும் மாறும் வகையில் விளையாடப்பட்டு வருகிறது. அதனை அனைவருமே பார்த்து வருகிறோம்.
அதனால் நான்காவது நாள் ஆட்டத்தை பாசிட்டிவாகவே அணுகுவோம். ரஹானேவை பொறுத்தவரை, அவர் எப்போதும் டாப் கிளாஸ் வீரர். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக விளையாடிய அனுபவம் கொண்டவர் ரஹானே. ஆனால் திடீரென இந்திய அணியில் தடுமாற்றம் ஏற்பட்ட போது, உள்ளூர் போட்டிகளில் விளையாடி ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். இந்த இறுதிப்போட்டியின் மூலம் மீண்டும் முக்கியமான வீரராக மாறியுள்ளார் ரஹானே என்று தெரிவித்துள்ளார்.