சென்னை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியை வெறுக்க நீங்கள் முழுமையான பிசாசாக இருக்க வேண்டும் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்றுமுதல் தொடங்கவுள்ளது. குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் விளையாடவுள்ளன. இந்தப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால் சென்னை அணி நிச்சயம் வெற்றிபெறும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் குஜராத் அணி முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக சென்னை அணி பற்றியும், எம்எஸ் தோனி பற்றியும் குஜராத் அணி தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நான் எப்போதுமே எம்எஸ் தோனியின் மிகப்பெரிய ரசிகன் தான். எம்எஸ் தோனியை வெறுக்க வேண்டுமென்றால் யாராக இருந்தாலும் முழுமையாக பிசாசாக இருந்தால் தான் முடியும்.
எம்எஸ் தோனியை பலரும் சீரியஸான நபராக இருப்பார் என்று நினைக்கிறார்கள். ஆனால் தோனி ஜாலியான மனிதர். அவர் எப்போதும் என் சிறந்த நண்பர். எப்போதும் என் சகோதரர் போன்றவர். அதேபோல் மனிதராகவும், கிரிக்கெட் வீரராகவும் ஏராளமான விஷயங்களை தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
அவரை பார்த்தும், அவருடன் பேசியும் ஏராளமான முக்கிய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா முதல்முறையாக தோனி கேப்டன்சியில் தான் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். அன்று முதல் தோனி மீதான அன்பை ஏராளமான முறை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதேபோல் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்ற போது, தோனியின் கேப்டன்சி ஸ்டைலை பின்பற்றுவேன் என்று கூறி இருந்தார். அதேபோல் சென்னை அணியின் கலாச்சாரத்தை பின்பற்றியே குஜராத் அணியும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது மும்பை அணி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனிடையே சென்னை அணி பற்றியும், தோனியை பற்றியும் குஜராத் அணி நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ சென்னை அணி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.